பக்கம்:நாலடியார் செய்திகள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

கல்லாதவர் கற்றவரைச் சார்ந்து ஒழுகினால் அவர்கள் அறிவு மணம் பெற்று வாழ்வில் ஒளி பெற்றுத் திகழ்வர். கற்க முடியவில்லை என்று அதற்காக மனச் சோர்வு கொள்ளத் தேவை இல்லை. எல்லாரும் பிற எல்லாச் செல்வமும் பெற்றுத் திகழ முடியும். ஒரு சிலரே கல்வி வல்லவராகத் திகழ்வர். அதற்கு நுண் மாண் நுழை புலம் என்பர். அவர்கள் கல்வி கற்றதோடு நில்லாமல் நுட்பமான அறிவு படைத்தவராகத் திகழ்வர், மற்றவர்களையும் பேசவைத்து, அல்லது எழுத வைத்து நூல்களைப் படைக்க வைத்துக் கற்றவர்கள் ஊக்குவிக்க வேண்டும். அறிவு மிக்க எழுத்தை மதிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். "நாரும் மலரைச் சார்ந்து மணம்பெறும்" என்பர். மலரைப் பிணித்துக்கட்டிவைக்கும் நார் தானும் மணம் பெறுகிறது. மலர்களைச் சிதறாமல் சேர்த்துக் கட்டுகிறது. மாலை கவின் பெறுகிறது. கல்லாதவரைச்சார்ந்து ஆள்க; அவர்களும் கல்வி அறிவு பெற்றுத் திகழ்வர்.

'நூல் பல கல்' என்றால் அவன் திரைப் பாடல்களை மனப்பாடம் செய்கிறான்; காதல் போதை தரும் கவிதைகளை அறிவு நூல் என்று வேதம்போல் பயில்கிறான். மன அழுக்குப்போக வள்ளுவம் கற்றால் பயன் உண்டு. 'ஓடிப் போனவள்' என்பவளின் ஓட்டத்தில் நாட்டம் வைத்தால் பயனில்லை. அறிவுவாணர்கள் என்று சொல்லிக் கொண்டு அற்பவிஷயங்களை எழுதுகிறார்கள்; அவ் எழுத்துக்களைப் படைப்பு நூல் என்று பறை சாற்றுகின்றனர். இவை எல்லாம் எழுத்து ஆகா. தினவுக்குச் சொரிந்துகொடுப்பதாகும். சிந்தனையைத் தூண்டும் சீரிய எழுத்துக்களைப் படித்தால் பயன் உண்டாகும். அவை காலத்தை வென்று ஞாலத்துக்கு ஒளி தந்து கொண்டே இருக்கும். காக்கை கத்தல் கர கரப்பு ஆகுமே தவிர அது 'கர கரப்பு ராகம்' ஆகாது;