பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. புதிய நிர்மாணம்

ன்பார்ந்த ராமு, என் கண்கள் தெளிவடையவில்லை - அறிவுக் கண்களைத்தான் குறிப்பிடுகிறேன். வாழ்க்கை, விடுவிக்க முடியாத சிக்கல்கள் நிறைந்த பெரும் புதிராகக் காண்கிறது.

எனக்கு உங்களிடத்தில் ஏதோ ஒருவிதமான நம்பிக்கை. அது நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே வருகிறது. அது எவ்விதமானது என்பதை உணர்ந்து கொள்ளவும், என்னால் முடியவில்லை. எது எனக்குத் தெரிந்து, தெளிய முடியாததாயிருக்கிறதோ அதைத்தான் நான் புதிர் என்று குறிப்பிடுகிறேன். இப்படி நீங்களும் எனக்கு ஒரு புதிராக இருப்பதனால் தானோ என்னவோ, எனக்கு விளங்காத புதிர்களை எல்லாம் உங்களிடம் தங்கு தடையின்றி என் உள்ளத்தைத் திறந்து காண்பிக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.

என் மனதில் சிந்தனைகள் குவிகின்றன, கலைகின்றன. எவ்வளவோ எழுத வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால் மறைந்தும் விடுகிறது. தோன்றி மறைவதாகிய இந்த வாழ்க்கையில் எண்ணற்ற மக்கள் வந்து கொண்டிருக்கின்றனர். மறைந்து கொண்டும் இருக்கின்றனர். பல தரப்பட்ட வாழ்க்கைகளின் ஒட்டமே காலத்தோடு பின்னப்பட்டு சரித்திரம் ஆகிறது என்பது என் துணிபு. என் துணிபு என்று நான் குறிப்பிடுவதன் காரணம், இன்று நமக்குக் கற்பிக்கப்படும் கல்வியில் சரித்திரம் என்ற ஒரு பகுதியும் இருக்கிறதல்லவா..? நீங்கள்தான் அடிக்கடி சொல்வீர்கள், “பள்ளியில் படிப்பு நமக்கு எதை அளிக்க வேண்டுமோ, அதை அளிக்கவில்லை. படித்து வெளியேறும் மாணவர்கள் மனிதப் பண்பு முற்றிய 'மனிதர்களாய் வாழ்வதற்கும் கூட அது உதவுவதில்லை” என்று. நீங்கள் படிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு நடைமுறை வாழ்வில் இறங்கி விட்டீர்கள். கல்லூரியில் பி.ஏ. வகுப்பின் படி மேல் காலை வைத்துக் கொண்டுதான் இதை உணர்கிறேன்.

திடீரென்று ஒரு நாள், ‘இதுவரை நாம் கற்றது என்ன?’ என்று என்னையே கேட்டுக் கொண்டேன். ‘கர்வம் ஒன்று, அசட்டை அடுத்தபடியாக, சோம்பேறித்தனம் மூன்றாவதாக, தன்நம்பிக்கையின்மை அதற்கு மேலாக...’ என்று என் மனசாட்சி பதில் சொல்லிக் கொண்டே போயிற்று. என்னால் சகிக்க முடியவில்லை. உதாரணமாக சரித்திரத்தையே எடுத்துக் கொண்டாலும், அது ஏதோ சென்ற காலங்களின் ‘காலண்டர்’ மாதிரி இருக்கிறதே அன்றி மனித சமுதாயத்தின் வளர்ச்சியையும், பண்பையும் கூறவே இல்லை.

கலாசாலைப் படிப்பிலிருந்து விலகிவிடுவதென்று தீர்மானித்து விட்டேன். கலைத் துறையில் அது கற்பதன் மூலம் எதை அளிக்குமோ அதைச் சொந்த