பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

24 ★ நா. பார்த்தசாரதி சிறுகதைகள்



“கலையின் மூலம் அறிவைப் பரப்ப முயற்சிக்கும்படி நீங்கள் யோசனை கூறினீர்கள். ஆனால் நானோ. அழகழகான, மனத்தை மயக்கத்தில் ஆழ்த்தக்கூடிய, போதை நிறைந்த காமலாகிரிச் சொற்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கலையை அழகு பெறச் செய்ய முயன்றேன். அதுதான் என் தொழிலாக ஆக்கப்பட்டிருந்தது. எவ்வளவுக்கெவ்வளவு நான் என்னைக் கெடுத்துக் கொண்டேனோ அவ்வளவுக்கவ்வளவு நான் புகழப்பட்டேன். என் காமக்கலையை விருத்தி செய்து கொள்வதற்காக அனுபவத்தில் ஈடுபட எண்ணி. அதை எல்லாம் ஏன் கேட்கிறாய். நான் பாவி ஆகி, மற்றவர்களையும் பாவ வழியில் தூண்டுபவற்றைச் செய்து கொண்டிருந்ததற்காக நான் பொருளும் புகழும் பெருமிதமும் அடைந்தேன்.

"நீங்கள் இவ்வளவு பெரிய எழுத்தாளரும், கவிஞரும் ஆகி இருப்பீர்கள் என்று எண்ணவில்லை. ஆச்சரியகரமான சமூக முன்னேற்ற வழியும் அரசியலில் செயல் முறையில் சில சாதனைகளும் செய்து காட்டியதற்காக நீங்கள் புகழப்படுகிறீர்கள், போற்றப்படுகிறீர்கள் என்று எண்ணினேன்.ஆனால், ‘தூய்மை’ பத்திரிகையில் தங்கள் ‘விடுதலை’ என்ற கவிதையைக் கண்டதும் என் மனம் ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விட்டது. விடுதலை என்றால் என்ன? தேவைகளில் விடுதலை நினைக்க, பேச, தொழ, விருப்புடன் வாழ போதுமான உரிமைகள்- இவை தாம் விடுதலை. இவற்றில் ஒவ்வொன்றையும் எடுத்தெடுத்துக் கூறி தமிழன்னை ஒருத்தி பாடி வரும் பாட்டு. அந்தக் கவிதை என் உள்ளத்தில் புதிய விழிப்பையே உண்டு பண்ணிவிட்டது என்று சொல்லவேண்டும்.அப்பொழுதுதான் என் பழைய லட்சியங்களைப் பற்றியும் உங்கள் புதிய வாழ்வு எப்படி இருக்கும் என்பதைப் பற்றியும் சிந்தனைகள் என் மனதில் துளிர்த்தன. கேவலமான என் வாழ்வின் நிலை கூரிய பாணங்களைப் போல் என் நெஞ்சைத் துளைத்தது. ஒடி வந்தேன்.

"இழந்து போன லட்சிய வாழ்வை எனக்கு நீங்கள் தான் மீட்டு அளிக்க வேண்டும்” என்றான் கணபதி.

அடுத்த மாதத்தில் அங்கே 'சர்வகலா நிலையம்’ தோன்றியது. கலையின் மூலம் அறிவைப் பரப்ப புதுமைக் கலையை உயிர் பெறச் செய்வதே லட்சியமாக அமைந்தது சர்வகலா நிலையம். அங்கே வாழ்வை சித்தரிக்கும் நாட்டியம், நாடகம், படிப்பு, கதை, சித்திரம், சிற்பம் எல்லாம் மலர்ந்தன.

கவிஞர் ராமுவின் புதிய நிர்மாணத்திலே வாழ்வின் விடுதலை முழுதும் பொலிந்து விளங்குவதைக் காணலாம். அங்கே எல்லோரும் ஒன்றையே நினைக்கிறார்கள். ஒன்றையே செய்கிறார்கள். அந்த ஒன்று எல்லோரும் நன்றாக இருக்க வேண்டும் என்பதே...

அங்கே ஒவ்வொரு மனிதனும் மன்னன். ஒவ்வொருவன் வாழ்வும் இன்பம். ஒவ்வொரு வீடும் கலைக்கூடனம்.

அவ்வளவிற்கும் வித்து உண்மை, தன்னலமற்ற பொன் உள்ளம்தான் வளர்க்கும் தண்ணீர்.

(குமரி மலர், நவம்பர், 1946)