பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 1.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46. மண்ணும் மாடியும்

சிலேட்டுப் பலகையில் அங்கங்கே சாக்பீசால் சுழித்த மாதிரி அந்த மாடியிலிருந்து பார்வைக்குத் தெரிந்த வானப் பரப்பில் வெண்மேகச் சுருள்கள் நெளிந்தன. அதன் கீழே பறவைகள் பறந்தன.

ஏற்காடு மலை, பழத் தோட்டங்களும், மலைச் சிகரங்களுமாக அந்த உச்சிப் போதில் அழகாகத்தான் இருந்தது. ஆனால், அந்த மாடியில் நின்று கொண்டு மலையையும், வானத்தையும் பார்த்துக் கொண்டிருந்த பரிபூரணத்தின் மனத்தில்தான் அழகு இல்லை.

சுருள் சுருளாகக் கலைந்து முன் நெற்றியில் விழும் தலை முடியும் ஏறக்குறைய அதே போல் கலைந்து அடங்காத மனமுமாக நின்று கொண்டும், உலாவிக் கொண்டுமிருந்தான் பரிபூரணம். பரிபூரணத்தின் மனம் பரிபூரணமாக இல்லை அப்போது. அங்கே வந்து அந்தச் சூழ்நிலையில் எந்த எழுச்சியையும், தூண்டுதலையும், உண்டாக்கிக் கொள்ள வேண்டுமென்று அவன் நினைத்திருந்தானோ, அவை உண்டாகவே இல்லை.

இடம் மாறி வந்த பின்னும் மனம் மாறவில்லை. பரிபூரணம் திரைப்படங்களுக்குப் பாட்டு எழுதுகிற கவிஞன். எல்லோரையும் போல ‘ஏதோ எழுதினோம்’ என்று எழுதி விடாமல் சினிமாவுக்கு எழுதினாலும் அதைக் கருத்தோடும், கவிதையுணர்ச்சியோடும் எழுதவேண்டும் என்று தனக்குத் தானே ஒர் இலட்சியம் வகுத்துக் கொண்டிருந்தான். எந்தெந்த உணர்ச்சிகளை எந்தெந்த நேரத்தில் பாட்டாக எழுத வேண்டுமோ, அவற்றைத் தானே அனுபவித்து உணர்ந்த மாதிரி அசல் தன்மையோடு எழுத வேண்டுமென்று பரிபூரணத்துக்கு ஆசை. அத்தகைய சிந்தனைக்கேற்ற தனிமையை நாடியே ஏற்காட்டுக்கு வந்திருந்தான் அவன்.

அப்போது அவன் பாட்டு எழுதிக் கொண்டிருந்த படம் ஒரு புது மாதிரியான சமூகக் கதை. கோடீசுவரனான செல்வக் குடும்பத்து இளைஞன் ஒருவன் குடிசையின் ஏழைப் பெண் ஒருத்திக்காகத் தன் செல்வங்களையும், செல்வாக்கையும், சுகபோகங்களையும் உதறி விட்டு வருகிறான். அவளுடைய காதலுக்காகக் குடிசையில் வாழ்கிறான். குறைந்த வசதிகளைப் பழகிக் கொள்கிறான். உழைக்கிறான். பணத்திலும் வசதிகளிலும், ஏழையாகி அன்பினால் செல்வனாகிறான் அவன். கதையின் தொடக்கத்தில் ஒரு சம்பவம்:-

ஒரு நள்ளிரவு. புயலும் இடியுமாக மழை பேய்த்தனமாய்ப் பெய்து கொண்டிருக்கிறது. அந்த ஏழைப் பெண் அவனைச் சந்திப்பதற்காக அவனுடைய ஏழு