காதல், கவிதை, போலியான தன்மைகள், எள்ளல், மோசடிகள், குடும்பம், சமுதாயம், சட்டம், தனிமனித குணவெளிப்பாடுகள் எனப் பலவிதப் பிரச்சினைகள் உலா வருகின்றன இத்தொகுப்பில்.
இத்தொகுப்புக்காக ஓராண்டுக்கு மேலான எங்களது உழைப்பு தமிழ் வாசகர்களுக்குக் கருத்துப் பெட்டகமாக இது பயன்தரும் போது உணரப்பெறும்.
தமிழ்ச் சிறுகதை வடிவத்திலும், உள்ளடக்கத்திலும் காலங்காலமாய் மாற்றம் பெற்று வருகிறது. இருபதாம் நூற்றாண்டுத் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தகுந்த படைப்பாளிகளில் ஒருவரான நா.பா. தமிழ்ச் சிறுகதை இலக்கியத்தில் தம் பங்கை எப்படிச் சாதித்துள்ளார் என்பதை இத்தொகுதிகள் துல்லியமாகக் காட்டும்.
இத்தொகுப்பிற்கு உதவியர்களுள் குறிப்பிடத் தகுந்தவர் நா.பாவின் உறவினரான திருமதி.லதா ரமேஷ் ஆவார். நா.பா.வின் சிறுகதைகளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றவரிவர். அவருக்கும் நா.பா.வின் துணைவியார் திருமதி.சுந்தரவல்லி பார்த்தசாரதி அவர்கட்கும் எமது நன்றி. 1946-ல் குமரிமலரில் வெளிவந்த ‘புதிய நிர்மாணம்’ கதையை நகலெடுக்க உதவிய ரோஜா முத்தையா நூலகத்திற்கும் எமது நன்றி.
இந்தச் சிறுகதைகளை முதலில் நா.பாவிடமிருந்து கேட்டு வாங்கி தமது இதழ்களில் வெளியிட்ட அனைத்துப் பத்திரிகை ஆசிரியர்களுக்கும், பின்னர் நூலாக வெளியிட்ட பதிப்பகங்களுக்கும் எமது நன்றி.
வாங்கிப் பயன் பெரும் இனிய வாசகர் உங்கட்கு என்றும் எம் நன்றி.
– தமிழ்ப்புத்தகாலயம்