பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107. காந்தி நூற்றாண்டு விழா

மாமா குமாரசாமி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் நாச்சியப்பன் முரண்டு பிடித்தார். எப்படியும் பம்பாய்க்குப் போக வேண்டும் என்ற வெறியோடு இருந்தார் நாச்சியப்பன். அபூர்வமாக மாமாவின் வார்த்தைக்கு அவர் கட்டுப்படுவது உண்டு.அது தெரிந்துதான் அந்தக் குடும்பத்தினர் பல சந்தர்ப்பங்களில் மாமா குமாரசாமியை அழைத்து அவருக்கு உபதேசம் செய்யச் சொல்லியிருக்கிறார்கள்.

இன்றோ மாமா குமாரசாமி தமக்காகவே நாச்சியப்பனிடம் மன்றாடிக் கொண்டிருந்தார். “நான் சொல்றதைக் கேட்டுக்க, அப்புறம் நீ இஷ்டப்படி செய்யி. ஏற்கனவே டாக்டர் கடுமையாகச் சொல்லியிருக்காரு. நீ ஹார்ட் பேஷண்டு வேறே. அல்ஸரும் இருக்கு இந்த வாரத்திலே இருந்தாவது இந்தப் பாழாய்ப் போன பழக்கத்தை விட்டுத் தொலை. உங்கப்பா நினைவா நீ நடத்தற பள்ளிக்கூடத்துக்கு ‘மகாத்மா காந்தி ஸ்கூல்’னு பேர் வச்சு அதுக்கு என்னைக் கரஸ்பாண்டெண்டாகவும் நியமிச்சிருக்கே. ஆனா அந்தக் காந்தீங்கற கங்கை இந்தத் தேசத்திலே ஓடத் தொடங்கி நூறு வருஷம் நிறையற சமயத்திலே கூட இந்தப் பாழாய்ப்போன கெட்ட பழக்கங்களை நீ விடலேன்னா அர்த்தமே இல்லே.”

“என்ன செய்யறது மாமா? இந்த வருஷம் அக்டோபர் முதல் தேதியிலிருந்து நானே குடிக்கிறதை விட்டிடறதா டாக்டரிட்ட ப்ராமிஸ் பண்ணினேன். நான் விட்டாலும் அது என்னை விடாது போலிருக்கிறதே! என்னாலே முடியலியே! என்ன பண்ணட்டும்?”

“முடியாமல் என்ன? பம்பாய்க்கு வாங்கியிருக்கிற பிளேன் டிக்கெட்டை கான்ஸல் பண்ணிட்டு, மனத்தைக் கட்டுப்படுத்திக்கிட்டு என் கூட வா. இன்னிக்கு அக்டோபர் மாசம் ரெண்டாம் தேதி, பள்ளிக்கூடக் குழந்தைகளுக்கு எல்லாம் காந்தி பேட்ஜும் மிட்டாயும் கொடுக்க ஏற்பாடு செஞ்சிருக்கேன். அதை நீ வந்து உன் கையாலேயே ஒவ்வொரு குழந்தைக்கும் கொடு, தெண்டத்துக்குக் குதிரையிலேயும், குடியிலேயும், கூத்துலேயும் பணத்தை ஏன் வீணாக்கணும்? அத்தினி குழந்தைங்களைச் சேர்த்து, ஒண்ணாப் பார்க்கறப்பவே உன் மனசுக்கு நிம்மதியா இருக்கும். வா சொல்றேன்” என்றார் குமாரசாமி.

“அதில்லே மாமா! நாளைக்குப் பாம்பே ரேஸ்லே சந்திக்கிறதா நாலஞ்சு நண்பர்களுக்கு லெட்டர் எழுதிட்டேனே!”

“லெட்டர் என்ன பிரமாத லெட்டர்?நீ போகாம இருந்திட்டா வரலேன்னு தானாத் தெரிஞ்சுக்கிறாங்க…” எழுபது வயதுத் தள்ளாமையையும் பொருட்படுத்தாமல்