பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

125. துல்லியமாக ஒரு மதிப்பீடு

ல்லப்பன் பட்டி அப்படி ஒன்றும் பெரிய நகரமுமில்லை; சிறிய கிராமமுமில்லை. பல நடுத்தர விவசாயக் குடும்பங்கள், சில பெரிய மிராசுதார்கள், நாலைந்து ரைஸ் மில்கள், பத்திருபது வட்டிக் கடைகள், அடகு பிடிக்கும் நிலையங்கள் எல்லாம் உள்ள ஒரு நடுத்தரமான ஊர் அது. என்ன காரணத்தாலோ அந்த ஊரில் வட்டிக் கடைகளுக்கும், அடகுக் கடைகளுக்கும் பிரமாதமாக லாபம் வந்தன. அதனால் புதிது புதிதாகப் பலர் வந்து வட்டிக் கடைகளும், அடகுக் கடைகளும் போட்ட வண்ணமாக இருந்தனர்.

எத்தனை கடைகள் வந்தாலும் புராதனமான பழ. சொ. என்ற இரண்டெழுத்து விலாசத்துக்கு உள்ள மகிமை ஒன்றும் குறையவில்லை. பழ. சொ. என்ற இரண்டெழுத்துக்களைச் சொன்னாலே ஊரில் அனைவருக்கும் உடனே புரியக் கூடிய பழ. சொக்கநாதன் செட்டியார் சர்வசாதாரணமான ‘பான் புரோக்கர்’களில் ஒருவர் மட்டுமல்லர். அவர் பெயருக்கு மகிமை உண்டாக்கும் வேறு சில நல்ல குணங்களும் அவரிடம் இணைந்திருந்தன. அதனால் அவ்வூரில் அவர் பெயருக்குத் தனித் தன்மை இருந்தது.

பழ.சொ. குறள், கம்பராமயணம், வில்லி பாரதம், கந்த புராணம், திருவிளையாடல், பெரிய புராணம் போன்ற இலக்கியங்களில் நல்லரசனையும், பொதுவாகக் கவிதைகளில் ஈடுபாடும் உள்ளவர். தமிழ்ப் புலமை, கவிதை, இவற்றுக்கு மட்டும் நெகிழ்ந்து கொடுக்கக் கூடிய அவர் மனம் வட்டிக் கடை விஷயங்களில் நெகிழ்ச்சியே இல்லாத கருங்கல்லாகி விடும்.பண விஷயம்-வரவு செலவுகளில் பழ.சொ. ரொம்பவும் கறாராகவும் கச்சிதமாகவும் இருப்பார். கால் காசு கூட இன்னொருவருக்காக விட்டுக் கொடுக்க மாட்டார்.

நல்லப்பன் பட்டியில் ஒரு திருக்குறள் கழகம் இருந்தது. அதற்குப் பழ. சொ. தான் பொக்கிஷதார். ஒரு சமயம் வட்டிக் கடைக்கு வந்த வாடிக்கைக்காரன் ஒருவன்,”என்ன செட்டியார் சார்? திருக்குறள் கழகத்திலே ஈகையைப் பத்திப் பேசறீங்க, வட்டிக் கடைக்கு வந்தா ஈவு இரக்கமில்லாம நடந்துக்கிறீங்க... ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லையே?’ என்று கேட்டு விட்டான்.

“சம்பந்தம் இருக்கணும்னு எந்த சாஸ்தரத்திலே தம்பி சொல்லியிருக்கு? ஈகையைப் பத்திச் சொன்ன அதே வள்ளுவர் பெருமான்தானே ஐயா ‘பொருள் செயல் வகை’ன்னும் பத்துக் குறள் சொல்லி வச்சிருக்காரு. ‘செய்க பொருளை’ன்னு ஓங்கி முதுகிலே ஓர் அறை வச்சில்ல சொல்றாரு” என்று பழ. சொ. தயங்காமல் அந்த ஆளுக்குப் பதிலடி கொடுத்தார்.