பக்கம்:நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2.pdf/512

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

157. ஒருமைப்பாட்டைக் காக்க ஒரு மாநாடு

திடீரென்று அரசாங்கத்துக்கு அவசர அவசரமாகப் புத்தி வந்து விட்ட மாதிரி இருந்தது. வருமுன் காப்பது என்கிற விவகாரமே அரசாங்க மூளையில் எந்தக் காலத்திலும், எந்த விஷயத்திலும் இடம் பெற்றதாக வரலாறே கிடையாது. பெரும்பாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரத்துக்கு ஏற்பாடு செய்வதுதான் வழக்கம். ஆனால், இம்முறை ஒரு சிறு வித்தியாசத்தோடு, காரியம் நடந்திருந்தது. அதாவது கண் கெட்ட பிறகு என்பதற்குப் பதில் கொஞ்சம் முன்கூட்டியே, அதாவது கண் கெடத் தொடங்கிய போது, அல்லது கெட்டுக் கொண்டிருக்கும் போது சூரிய நமஸ்காரத்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

நாட்டின் மாநிலங்களுக்கு இடையே மொழி ரீதியாகவோ, நதி நீர்ப் பிரச்னையாலோ, இன ரீதியாகவோ, வேறுபாடுகள் தோன்றுவதைத் தடுக்க ஆவன செய்யும்படி ஒரு கமிட்டியை அரசாங்கமே நியமித்திருந்தது. கமிட்டியில் எல்லா விதமான இன-மொழி-பிரதேச உறுப்பினர்களும் இடம் பெற்றிருந்தனர். ஆறு வாரக் காலத்துக்குள் கமிட்டி தன் சிபாரிசுகளை எழுத்து மூலம் அரசாங்கத்துக்கு அனுப்பி வைக்க வேண்டுமென்று அவசர உத்தரவும் பிறப்பிக்கப்பட்டிருந்தது. கமிட்டியின் உச்ச கட்ட மகாநாடு விரைந்து உடனே கூட இருந்தது.

முதல் கூட்டம் சிம்லாவில் கூட வேண்டும் என்று ஏற்பாடாகியிருந்தது. மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த நரசிம்ம கர்லேகர் அக்கமிட்டியின் தலைவராகவும், ஹரியானாவைச் சேர்ந்த ஹரி கேசவ லால் காரியதரிசியாகவும் நியமிக்கப்பட்டிருந்தனர். மாநிலத்துக்கு மாநிலம் மொழிக் கலவரங்கள், இனக் கலவரங்கள், எல்லைத் தகராறுகள் பூதாகரமாக உருவெடுப்பதைத் தடுக்க அவசரமாக கமிட்டியோசனை கூறியாக வேண்டுமென்பது அரசாங்கக் கட்டளையாயிருந்தது. அக்கமிட்டிக்காக அரசு பல லட்சம் ஒதுக்கியிருந்தது.

அடுத்த நிதியாண்டின் முதல் நாளாகிய ஏப்ரல் முதல் தேதி சிம்லாவில் கூட்டத்துக்கு ஏற்பாடு ஆயிற்று. கோடையின் தொடக்கமாதலால் சிம்லா என்கிற இடக்கவர்ச்சி பெரிதாயிருக்கும் என்று நம்பினார்கள். பிரதேச உறுப்பினர்களைத் தங்க வைப்பதிலிருந்து எல்லா ஏற்பாடுகளிலும் ஒருமைப்பாட்டைப் புகுத்தியிருந்தனர். மகாநாடு நடக்க இருந்த அரசாங்க விருந்தினர் விடுதி அறைகளில் வேறு வேறு பிரதேசங்களைச் சேர்ந்த வேறு வேறு மொழிகள் பேசும் இருவரை ஒவ்வோர் அறையிலும் இணைத்துப்போட்டிருந்தனர். ஒன்றுபட அது உதவும் என்று கருதினர்.

நாட்டின் எல்லா மொழிகளையும், எல்லாப் பிரதேசங்களையும், எல்லா நதிகளையும் சிலாகித்து வாழ்த்துகிற தாகூரின் பாடல் ஒன்றை மகாநாட்டின்