106. எழுத்தறிவுத் திட்டம் கோப்பில் கிடந்த எழுத்தறிவுத் திட்டம் எழுத்தறிவின் இன்றியமையாமை, அது துடைக்கும் இழிவுர அதனால் விளையும் நன்மை பற்றி, மற்றப் பெரியவர்கள் உணரவில்லை என்று எண்ணி விடவேண்டாம். பேரறிஞர் அண்ணாதுரை, அதுபற்றி உணர்ந்திருந்தார்; அதற்காவன செய்ய முயன்றார்; முதியோர் எழுத்தறிவுச் சோதனையை நடத்திப் பார்க்க, நிதி ஒதுக்கிவிட்டே மறைந்தார். 1968 ஆம் ஆண்டு மே திங்கள் தமிழக முதல் அமைச்சர், அறிஞர் அண்ணா அலுவல் பற்றித் தில்லிக்கு வந்தார். அப்போது நான் தில்லியில் கல்வி அமைச்சகத்தில், இணைக் கல்வி ஆலோசகராகப் பணிபுரிந்து கொண்டிருந்தேன். முதியோர் எழுத்தறிவுப் பிரிவு என்னிடம் இருந்தது. 'உழவருக்குப் பயன்படும் எழுத்து அறிவு' த்திட்டம் ஒன்று கோப்பிலேயே ஊசலாடிக் கொண்டிருந்தது. நான் தில்லியில் பொறுப்பு ஏற்றதும், அந்தக் கோப்பின்மேல் தனி அக்கறையும் ஆர்வமும் காட்டினேன். அத்திட்டத்திற்குத் திட்டக்குழு ஒப்புதல் கொடுக்கவேண்டும்; பிறகு நிதித்துறையின் செலவினக் குழு' இசையவேண்டும். முதல் குழு கட்டை போட்டுக் கொண்டிருந்தது. ஆகவே திட்டம் இரண்டாவது குழுவிற்கு அனுப்பப்படவில்லை. அந்நிலையில்தான், அது என் பொறுப்புக்கு வந்தது. திட்டக்குழுவின் கல்வி ஆலோசகராயிருந்த டாக்டர் ஜோஷி என்பவர் அதற்கு முன், வடமாநிலம் ஒன்றில் - பஞ்சாபில் கல்வி இயக்குநராக இருந்து அனுபவம் பெற்றவர். அப்போது, சென்னை மாகாணத்தில் விரைந்து பரவிக் கொண்டிருந்த இலவசப் பகல் உணவுத் திட்டம், சீருடை இயக்கம், ஊராரைக் கொண்டு பள்ளிகளைச் சீரமைக்கும் இயக்கம் ஆகியவற்றை நேரில் கண்டு அறிந்து கொண்டவர். அதனால் என்னிடம் பெரிதும் நம்பிக்கையுடையவர். எனவே, நானே அவரிடம் வலிய சென்றேன்; உழவர் எழுத்தறிவுத் திட்டத்தைப் பற்றிக் கலந்துரையாடினேன்; அவருக்கிருந்த அய்யங் களுக்கு விளக்கம் கூறினேன். சிறுபணப் பாதுகாப்பு மாற்றங்களோடு, அந்தத் திட்டத்தைப் பரிந்துரைக்க இசைந்தார்.
பக்கம்:நினைவு அலைகள்-1.pdf/739
Appearance