பக்கம்:நீங்களும் இளமையாக வாழலாம்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

டாக்டர். எஸ் நவராஜ் செல்லையா


ஒருவனுக்கு இத்தனை வயதாகி இருக்கிறது. அதனாலே இவன் இளைஞன், அதனாலே இவன் கிழவன் என்று கூறிவிடலாமா?

நாம் உலகத்தில் தோன்றியவுடனேயே நமக்கு வயது குறிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள். இந்த வயது கூறும் பரம்பரையை நாம் இப்பொழுது இரு வகையாகப் பிரித்துப் பார்க்கலாம்.

1. கடிகாரம் காலண்டர் இவற்றை வைத்துக் கொண்டு ஒருவரது வயதை அறிந்து கொள்ளும் முறை (Chronological age)

2. ஒருவனுடைய உடல் வளர்ந்திருக்கும் உடல் வளர்ச்சி நிலையைக் கொண்டு வயதை அறிந்து கொள்ளும் முறை (Physical age)

உடலில் அதிக வளர்ச்சி ஏற்பட்டு விட்டதனாலேயே ஒருவனை முதியவன், கிழவன் என்று கூறி விடலாமா? அல்லது இவன் பிறந்து இத்தனை ஆண்டுகளாகி விட்டன. இதனாலே இவன் இளைஞன் அல்லது முதியவன் என்று கூறி விடலாமா? எப்படி கூறுவது?

முப்பது வயதிற்குள்ளே வாழ்க்கையே முடிந்து விட்டது. இனிமேல் வாழ்க்கையில் என்ன இருக்கிறது? என்று முனுமுனுப்பவர்களை நாம் அன்றாடம் பார்க்கிறோம்.

58 வயது தான் உழைக்கும் வயது. அதன்பின் ஓய்வு கொள்வது தான் முறை என்று உத்தியோகத்திலிருந்து மனிதர்களைக் கழற்றி விட்டு விடுகிற பழக்கம் நம்மிடையே இருக்கிறது.

அப்படியென்றால் 58க்கு மேல் மனிதர் முதுமைக்கு ஆட்பட்டு அடிமையாகி விடுகின்றார்களா? அவர்களால் உலகுக்கு எந்த விதமான உபயோகமும் இல்லையா?