பக்கம்:நீங்களும் நோயில்லாமல் வாழலாம்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நீங்களும் நோயில்லாமல் வாழலாம்

99


இதயத்தின் அளவை, அவரவர் மூடிய கையளவு என்பார்கள். பிறந்த குழந்தை அழத் தொடங்கிய காலத்திலிருந்து இறுதிவரை இதயம் இரத்தத்தை இறைத்துக் கொண்டு இருக்கிறது. உழைத்துக் கொண்டு வருகிறது.

ஒருமுறை இதயம் சுருங்கி இரத்தத்தை இறைத்து, அடுத்த முறை இரத்தம் இறைப்பதற்குள் எடுத்துக் கொள்கின்ற ஓய்வு, வினாடியிலும் சிறு பகுதி என்கிறார்கள் மருத்துவ வல்லுநர்கள். இவ்வாறு ஒரு நாளைக்கு இதயம் ஒரு ‘லட்சம்’ தடவைக்கு மேல் துடித்து இரத்தத்தை இறைத்து உழைத்து வருகிறது.

ஒருமுறை இதயமானது இரத்தத்தை இறைக்கும் பொழுதுதான் இரத்தக் குழாய்களில் துடிப்பு ஏற்படுகிறது. அதை நாடித்துடிப்பு என்று கூறுகின்றார்கள். பிறந்த குழந்தைக்கு இதயத் துடிப்பு நிமிடத்துடிப்பு 136 முறை. 5வயது குழந்தைக்கு இதயத்துடிப்பு 89 முறை. நிமிடத்திற்கு சாதாரண மனிதனுக்குரிய துடிப்பு 72 முறை. உடல் நலமும் பலமும் வாய்ந்தவனுக்கு 45 முறை என்றும் கணக்கிட்டுக் கூறுகின்றார்கள்.

யானைக்கு ஒரு நிமிடத்துக்கு இதயத்துடிப்பு 35 முறை. சுண்டெலிக்கு ஒரு நிமிடத்துக்கு 700 முறை.

ஒருமுறை இதயம் சுருங்கி இரத்தத்தை உடல் முழுதும் பாய்ச்சுகிறது என்றால். அதன் ஆற்றல் எவ்வளவு என்று எண்ணுகின்றீர்கள். ஒரு முறைக்கு 2 பவுண்டு எடையை 30செ.மீ உயரத்திற்குத் தூக்குவதற்குச் சமமான ஆற்றல் என்கிறார்கள். இன்னும் அதன் வலிமையைப் பற்றிப் பாருங்கள்.