பக்கம்:நீதிக் களஞ்சியம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

23

கற் பிளவோடு ஒப்பர், கயவர்; கடுஞ் சினத்துப்
பொற் பிளவோடு ஒப்பாரும் போல்வரே: வில் பிடித்து.
நீர் கிழிய எய்த வடுப் போல மாறுமே,
சீர் ஒழுகு சான்றோர் சினம்.23

நல் தாமரைக் கயத்தில் நல் அன்னம் சேர்ந்தாற்போல்,
கற்றாறைக் கற்றாரே காமுறுவர்; கற்பு இலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர்: முதுகாட்டில்
காக்கை உகக்கும், பிணம்.24

நஞ்சு உடைமை தான் அறிந்து. நாகம் கரந்து உறையும்;
அஞ்சாப் புறம் கிடக்கும், நீர்ப் பாம்பு:—நெஞ்சில்
கரவு உடையார் தம்மைக் கரப்பர்; கரவார்,
கரவு இலா நெஞ்சத்தவர்.25

மன்னனும் மாசு அறக் கற்றோனும் சீர்தூக்கின்,
மன்னனின் கற்றோன் சிறப்பு உடையன்; மன்னற்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பு இல்லை; கற்றோற்குச்
சென்ற இடம் எல்லாம் சிறப்பு.26

கல்லாத மாந்தர்க்குக் கற்று உணர்ந்தார் சொல் கூற்றம்:
அல்லாத மாந்தர்க்கு அறம் கூற்றம்; மெல்லிய
வாழைக்குத் தான் ஈன்ற காய் கூற்றம்; கூற்றமே.
இல்லிற்கு இசைந்து ஒழுகாப் பெண்.27

சந்தன மென் குறடு தான் தேய்ந்த காலத்தும்,
கந்தம் குறைபடாது ஆதலால், தம் தம்
தனம் சிறியர் ஆயினும், தார் வேந்தர் கெட்டால்,
மனம் சிறியர் ஆவரோ மற்று?28

மருவ இனிய சுற்றமும், வான் பொருளும், நல்ல
உருவும், உயர்குலமும், எல்லாம், திரு மடந்தை
ஆம் போது, அவளோடும் ஆகும்; அவள் பிரிந்து
போம் போது, அவளோடும் போம்.29

சாம்தனையும், தீயனவே செய்திடினும், தாம் அவரை
ஆம்தனையும் காப்பர் அறிவு உடையோர்;—மாந்தர்
குறைக்கும் தனையும், குளிர் நிழலைத் தந்து,
மறைக்கும் ஆம் கண்டீர் மரம்.30