பக்கம்:நூறாசிரியம்.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

370

நூறாசிரியம்


88 பெட்பொழி நெஞ்சே!


முதுசெம் பரத்தை முகங்குத் திட்ட
கொடுமுண் புரையக் கடுங்கண் நோக்கும்
ஊற்றிவாய் வெண்பூ வுன்மத் தன்காய்
மேற்றிகழ் குறுமுண் ணேய்முகக் கடுப்பும்
கருங்கற் பிளவைக் கரட்டுரை யிறுப்பும் 5
சுருங்கை யுளமும் முருங்கை யுரனும்
பெற்றியார்ப் பெரியோ ராக்கும்
பெற்றிய பொருளில் பெட்பொழி நெஞ்சே!

பொழிப்பு:

முதிய செம்பரத்தைச் செடியினது முனைகூர்மைப்பட்டு வளைந்த முள்போலும் வன்மைவாய்ந்த கண்ணின் பார்வையும், ஊற்றியைப் போலும் வடிவமைப்புக் கொண்ட வெண்ணிறப் பூவையுடைய உன்மத்தன்காய் மேற்கானப்படும் சிறுமுள் போலும் முகத்தின்கண் கடுகடுப்பும், கருங்கற் பிளவு போலும் வாயினின்றும் வெளிப்படும் ஒழுங்கற்ற பேச்சும், சுருங்கை போலும் குறுகிய உள்ளமும் முருங்கை மரத்தைப் போலும் புல்லிய உடல் வலிமையும் கொண்ட இயல்புடையாரையும் பெரியோராய் உயர்த்திக் காட்டுகின்ற தன்மை வாய்ந்த பொருள்களைத் தேடுவதில் நெஞ்சத்துக் கொண்ட விருப்பத்தைக் கைவிடுவாயாக!

விரிப்பு:

இப்பாட்டு அகப் பொருள் சார்ந்தது.

தலைவியினிடத்துக் காதல் கொண்ட தலைவன் அவளை வரைந்து கொள்ளாது, பொருள்தேடும் பொருட்டுப் பிரிந்து செல்லக் கருதினானாக. அவன் பிரிவைத் தடுக்கும் நோக்கொடு தோழி அவனுக்குப் பொருளின் இழிவை உணர்த்துவதாக அமைந்தது இப்பாட்டு.

பொலிவிலாத் தோற்றமும், நயமில்லாப் பேச்சும் குறுகிய மனப்பான்மையும் வலிமையற்ற உடலுங் கொண்டாரையும் பெரியோர் என்னுமாறு உயர்த்திக்காட்டும் செல்வத்தை விரும்பற்க என்கிறாள் தோழி. அவள் கூறுவதன் நோக்கம் பிரிந்து செல்வதைத் தவிர்த்துக் தலைவியை வரைந்து கொள்ளவற்புறுத்துவதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நூறாசிரியம்.pdf/396&oldid=1209687" இலிருந்து மீள்விக்கப்பட்டது