பக்கம்:நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்

என்று கூறி விட்டுப் புரோகிதரிடம் “ஐயா, நீங்கள் மாலையில் வந்து பணத்தை பெற்றுக்கொள்ளுங்கள்!” என்றதும், இது உண்மையா? பொய்யா? என விக்கித்து நின்றார் புரோகிதர்.

ஒவ்வொரு நாளும் வழக்குகளைப் பொறுத்துக் கட்சிக் காரரிடமிருந்து பணம் வருவது வழக்கம். மிகச் சிறந்த சட்ட நிபுணர் என்பதால் பலரும் அவரையே நாடினர். அன்றைய தினம் அவருக்குவந்த மொத்த வருமானம் ஆயிரத்து முந்நூறு ரூபாயாகும். உதவியாளர் அவரை அணுகி “புரோகிதருக்கு முந்நூறு ரூபாய் கொடுத்துவிட்டு, மீதிப் பணத்தை வங்கியில் கட்டி விடட்டுமா?” எனக் கேட்டார்.

“வேண்டாம் - இன்றைக்கு வரும் பணம்முழுவதும் அவருக்கே கொடுப்பதாகக் கூறிவிட்டேன்.ஆகவே, மொத்தப் பணத்தையும் அவரிடமே கொடுத்து விடுங்கள் அவரது பெண்ணின் அதிர்ஷ்டமே இன்று பணம் அதிகமாகக் கிடைத்திருக்கிறது ஆகவே அவளது திருமணம் சிறப்பாக நடக்கட்டும்” என்றார் மோதிலால் நேரு. கொடுப்பதற்கு என்று இப்படியொரு மனம் மட்டும் இருந்தால் புரோகிதர் மகிழ்ச்சிக்குக் கேட்கவா வேண்டும்!

🌑