இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
கிழச் சிங்கம்
வெண்மை யான தாடியுளார்-கொள்கை
விளக்கிப் பேசும் சொற்பொழிவில்
உண்மை யிருக்கும்; பயனிருக்கும்-தமிழர்
உயர்வுக் கான கருத்திருக்கும்!
சூதும் வாதும் செய்பவரைக்-கண்டால்
தூவென் றுமிழ்ந்து தள்ளிடுவார்
சாதி வெறியும் மதவெறியும்-போனால்
தானே நன்மை வருமென்பார்
பழைய புராணம் படித்ததனை-நாட்டில்
பரப்பு வோர்க்குப் பகையாவார்
உழைப்பு முயற்சி பகுத்தறிவு-மிகவும்
உடையோர்க் கன்புத் தாயாவார்!
இறைத்துப் பாய்ச்சும் தண்ணீர் போல்-அவர்
எழுச்சிக் கருத்தும் பயன்தருமே!
நரைத்துத் திரைத்து மூத்திடினும்-தமிழ்
நாட்டுக் குழைக்கும் பெரியாரே!
நேரிய ஒழுக்கம்; பண்புடைமை-நாட்டில்
நிலைபெற் றோங்க வேண்டுமெனும்
சீரிய கருத்தை உடையவராம்-கிழச்
சிங்கம் பெரியார் வாழியவே!