பக்கம்:பள்ளிக்குச் சென்ற சிட்டுக்குருவிகள்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



முன்னுரை

முயல் குட்டிகளை வைத்து முன்னே ஒரு கதைப் புத்தகம் எழுதினேன். அந்தப் புத்தகம் முழுவதும் எல்லாக் கதை களும் முயல் குட்டிகளைப் பற்றியே அமைந்தது. அதைப் போலவே சிட்டுக்குருவிகளை வைத்துக் கதை எழுதினால் என்ன என்று தோன்றியது. உடனே எழுதத் தொடங்கினேன்.

சிட்டுக்குருவிகள் யாருக்கும் தொல்லை கொடுக்காதவை. பார்க்க அழகானவை. அவை வால் வெட்டிப் பறக்கும் போதும், குந்தும் போதும், இரை கொத் தும் போதும், நடக்கின்ற நாடகம் கண்ணுக்கு விருந்து சலிப்புத் தராத நல்ல பொழுது போக்கு!

சிட்டுக் குருவிகளைப் பார்க்கின்ற போதே நம் உள்ளத்தில் ஒரு துள்ளல் ஏற்படுகிறது. சிறு பிள்ளைகள் துறுதுறு வென்று இருந்தால் சிட்டுக்குருவி போல் இருக்கிறான் என்று சொல்லுவார்கள்.

சிட்டுக் குருவிகளின் செயல்களைச் சுவைத்துச் சுவைத்துப் பாவேந்தர் பாரதிதாசன் பல பாடல்கள் எழுதியுள்ளார்.

இப்படிப்பட்ட சிட்டுக் குருவிகளை வைத்து இங்கே ஐந்து கதைகள் எழுதியிருக்கிறேன்.