பக்கம்:பாட்டரங்கப் பாடல்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


அங்கிங்குப் போவானேன்? ஆசை மனையாட்டி!
இங்குள்ள நம்வீடு, வாழ்க்கை, எழிற்சிறுவர்
பொங்கிவரும் அன்பின் புதுத்தோற்றம்! கேள் நமது
தங்கச் சிறுமி தமிழ்ப்பாட்டே அன்பாகும்!
அன்றொருநாள் காதல் அரும்புகின்ற முன்னாளில்
சென்ற நிகழ்ச்சியிதோ செப்புகின்றேன்; கேளேடி!
சின்ன மயில்போற் சிறுவீட்டுத் தோட்டத்தில்
முன்னாள் உனைக்கண்டேன்! அந்நாளை இந்நாளில்
எண்ண இனிக்கும்! இதற்கென்ன காரணம்? சொல்!
பெண்ணே! என்வாழ்விற் பிரியா அகம்புறமே!
பார்க்காது பார்த்துப் படர்ந்த கொடிமுல்லைப்
பூக்கொய்து கொண்டிருந்தாய; பூத்தேடி வந்தவன்போற்
பேச முனைந்தேன் நான்; இல்லை; பிதற்றினேன்;
ஆசை இருந்தும் அசையாமல் நின்றிருந்தாய்
பெண்ணைஏ னிந்தப் பெரும்புலவர் எல்லாரும்
‘வண்ண மயில்’ என்றும், ‘மான்’ என்றும் சொன்னார்கள்?
ஊமை இனமிவர்கள்! உண்மையிதோ கண்டேன்!
‘ஆம்!ஆம்’ எனச்சொன்னேன்! அவ்வேளை என்னை நீ
கொல்லும் விழியாற் கொலை செய்யப் பார்த்ததுண்டு!
மெல்லச் சிரித்தாய் விளக்கமென்ன? சொல்லேடி!
ஊருக் கருகில் உயர்தென்னந் தோப்புக்குள்
நீர்மொள்ளத் தோழியொடு வந்தாய் நீ! நீர்நிலையில்
நொச்சி மணக்க, நுணாமணக்கப் பன்னூறு
பச்சைப் பசுந்திங்கள் வந்து படிந்ததைப்போல்
தாமரைகள், நீர்ப்பரப்பில் ஓச்சும் தனியரசு
காமாறும் காலக் குயில்தேடி உன்னருகில்
நான்வந்தேன்; நின்றேன்; தமதிரண்டு கண்கண்
தேன்மொழியாள் தோழி, ‘புதுக்குடியர்’ என்றாளே!