பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

134

பாண்டிய மன்னர்

கொன்றவனாகிய மனுச்சோழனும் இருந்து அரசாண்டதாற் புகழ் படைத்த புகார் நகரம் என்ற காவிரிப்பூம் பட்டினம் எனது பிறப்பிடமாம், அவ்வூரிலே இகழ்ச்சி யற்ற சிறப்பையுடைய புகழ் மிக்க பெருங்குடி வாணிகருள் மாசாத்துவான் என்பாரது மகனாராய்ப் பிறந்து, இந்நகரில் வாழ வேண்டும் என்ற கருத்தோடு வந்து, வினைப் பலனாற் கொலைக் களத்திலே இறந்த கோவலர் என்பாரது மனைவி யாவேன். கண்ணகி என்பது என் பெயர்,” என்று கூறினள்.

அது கேட்ட பாண்டியன், “பெண்ணணங்கே, கள்வனைக் கொல்லுதல் கடுங்கோல் அன்று; செங்கோலின் சிறப்பேயாம்,” என்று கூறினன். அதற்குக் கண்ணகி, “நன்னெறியை நயவாத கொற்கை வேந்தே, என் காற் பொற்சிலம்பின் பரல் மாணிக்கமாம்,” என்றாள். அது கேட்ட அரசன், அச்சிலம்பைத் தருவித்து வைக்கக் கண்ணகி அதனை உடைத்தாள். உடனே மாணிக்கப் பரல் அரசன் முகத்தெதிரில் தெறித்து விழுந்தது. அதனைக் கண்ட நெடுஞ்செழியன், மனம் மிகவும் வருந்தி, “தாழ்ந்த குடையன்! தளர்ந்த செங்கோலன்! பொன்செய் கொல்லன் தன் சொற்கேட்ட யானோ அரசன்! யானே கள்வன் !! உலகவுயிர்களை அற நெறியி னின்று காப்பாற்றும் தென்னாட்டரசு என்னிடம் தவ றியது, இனி 'யான் உயிர் வாழ்வதைக்காட்டிலும் இறப்பதே சிறப்பாம். இன்றே, இன்னே, என் வாழ்வு, கெடுக,” என்று கூறிக்கொண்டு, அரசு கட்டிலிற் சாய்ந்தான். அங்கு அருகிலிருந்த கோப்பெருந்தேவி குலைந்து நடுங்கி, “கணவனை யிழந்தோர் மனம் அமைதியடையும்-