பக்கம்:பாண்டிய மன்னர்.djvu/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

பாண்டிய மன்னர்


காரிக் கண்ணனார்:-- நீவிர் எல்லீரும் கருதுமாறு செய்துவிடுகின்றோம். அரசரேறே, இச்செய்யுளை யேற்றுக் கொள்க:

“வல்லா ராயினும் வல்லுந ராயினும்
புகழ்த லுற்றோர்க்கு மாயோ னன்ன
வுரைசால் சிறப்பிற் புகழ்சால் மாற,
நின்னொன்று கூறுவ துடையேன் என்னெனில்
நீயே, பிறர்நாடு கொள்ளுங் காலை யவர்நாட்
டிறங்குகதிர்க் கழனிநின் னிளையருங் கவர்க
நனந்தலைப் பேரூர் எரியும் நக்க
மின்னுநிமிர்ந் தன்னநின் னொளிறிலங்கு நெடுவேல்
ஒன்னார்ச் செகுப்பினுஞ் செகுக்க வென்னதூஉங்
கடிமரந் தடித லோம்புநின்
நெடுநல் யானைக்குக் கந்தாற் றாவே."[1]

நக்கீரனார்:- நாம் கூறிய கருத்துக்களை ஒருவாறு ஏற்றுக்கொண்டு மறுத்தது போலச் செய்யுள் அமைந்திருக்கிறது.

நன்மாறன்:-புலவரேறே, நும் கருத்து நன்கு அமைந்துளது. இச்சிறிய பொருளைப் பரிசிலாகப் பெறுக.

காரிக் கண்ணனார்:- அன்போடு புலவர்க்கு உதவும் அருங்குணத்துப் பெருந்தகைமை வாய்ந்த அரசாகையால், நீ தருவது எவ்வளவிற்றேயாயினும், நமக்கு உவப்பே விளைக்கும். இனி யாம் விடை பெற்றுக் கொள்கிறோம்.

————————————————————————

  1. புறநானூறு - செய்யுள், 57.