பக்கம்:பாரதிதாசன், முருகு சுந்தரம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

பாரதிதாசன்

தமிழ் இயற்கையோடியைந்த மொழி என்பதைப் பாரதிதாசன் பறவைகள், விலங்குகள் மொழியோடு ஒப்பிட்டுக் காட்டுகிறார்.

காக்கை 'கா' என்றுதனைக்
காப்பாற்றச் சொல்லும்; ஒரு
கருமுகில்தான்
நோக்கியே கடமடா
என்றேதன் கடனுரைக்கும்
நுண்கண் கிள்ளை
வாய்க்கும்வகை 'அக்கா' என்
றழைத்ததனால் வஞ்சத்துப்
பூனை 'ஞாம் ஞாம்' (நாம்)
காக்கின்றோம் எனச் சொல்லக்
கழுதையதை ‘ஏ’ என்று
கடிந்து கூவும்.

இறுதியாகத் தமிழியக்கத்தில் பாரதிதாசன் ஒரு வேண்டுகோள் விடுக்கிறார் தமிழ் மக்களை நோக்கி:

தமிழுயர்ந்தால் தமிழ்நாடு
தானுயரும் அறிவுயரும்
அறமும் ஓங்கும்
இமயமலை போலுயர்ந்த
ஒருநாடும் தன்மொழியில்
தாழ்ந்தால் வீழும்
தமிழுக்குப் பொருள் கொடுங்கள்
தமிழறிஞர் கழகங்கள்
நிறுவி டுங்கள்
தமிழ்ப்பள்ளி கல்லூரி
தமிழ்ஏடு பலப்பலவும்
நிலைப்பச் செய்வீர்

திருமுருக கிருபானந்த வாரியார் நாடறிந்த சைவர் முருக பக்தர், ஆத்திகப் பெருமகனார். பாரதிதாசன் தன்மான இயக்கத்தைச் சேர்ந்த நாத்திகர் பெரியார் தொண்டர். இட இரு துருவங்களும் ஒருமுறை வேலூரில் நேரில் சந்தித்துக் கொண்டன. அவ்வூர்த் தமிழார்வத்தார்