பக்கம்:பாலைச்செல்வி.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை சங்க இலக்கியம் பயிலத் தொடங்கிய நேரம். அதற்குத் துணை நிற்கும் என்பதால், தஞ்சைக் கரந்தைத் தமிழ்ச் சங்கத் திங்கள் வெளியீடாகிய தமிழ்ப் பொழிலைத் தொடர்ந்து படித்து வந்தேன். அதில், தோரமங்கலம் ஆசிரியர் வரத நஞ்சையப் பிள்ளையவர்கள் கலித் தொகைப் பாடல்களுக்கு அளித்து வந்த விளக்கப்பேருரை, அறிவுக்கு விருந்தளிக்கும் ஆழம் உடையதாய் அமைந் திருந்தது. அதைப் படிக்கும் பொழுது, கலித்தொகையின் ஒவ்வொரு பாட்டின் கருப் பொருளும் எந்தச் சூழ்நிலையினைச் சுட்டி நிற்கிறது என்பதை விளக்கும் விரிவான உரையை முன்னுரையாக அளித்துப் பாடற் பொருளை விரித்துரைத்தால், ஒவ்வொரு பாட்டின் பொருளையும் தெளிவாக உணர முடியும். ஒவ்வொரு பாட்டின் விளக்கமும் ஒரு சிறு கதைபோல் அமைந்து படிப்பவர்க்குச் சுவையூட்டுவதாயும் அமையும் என உணர்ந்தேன். அவ்வகையில் எழுதப்பட்ட கலிப்பாக்களில் பாலை சார்ந்த கலிப்பாக்கள் முப்பத்து ஐந்தின் விளக்கம் பாலைச் செல்வி என்னும் பெயர் தாங்கி வெளிவருகிறது. இதை வெளியிடும் பதிப்பகத்தாருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி. அன்பன், கா. கோவிந்தன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைச்செல்வி.pdf/5&oldid=1006199" இலிருந்து மீள்விக்கப்பட்டது