பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - இல்லறவியல் - புறங்கூறாமை

127


அதி. 19 - புறங்கூறாமை

அதாவது, ஒருவரில்லாதவிடத்து அவரைப்பற்றித் தீதாகப் பேசுதல். புறம் முதுகு அல்லது பின்பக்கம். ஒருவரில்லாத இடம் அவருக்குத் தெரியாத முதுகுபக்கம் போன்றிருத்தலால் புறம் எனப்பட்டது. புறத்திற் கூறுவது புறங்கூறுதல். அது புறம் எனவும் படும். அன்று அது இடவாகு பெயர்.

புறங்கூறுதல், கோட் சொல்லுவதும் குண்டுணி பேசுவதும் என இருவகைத்து. ஓர் அதிகாரியினிடத்தில் ஒரு பணியாளனைப்பற்றித் தீதாகச் சொல்வது கோள்; சோம்பேறிகள் பலர், சிறப்பாக வேலையொழிந்த பெண்டிர், ஒருவரைப்பற்றித் தீதாகப் பேசி மகிழ்வது குண்டுணி. கோள் குறளையெனவும் படும்.

இலக்கிய வழக்கிற் பெரும்பாலுங் கோட்சொல்லுவதைக் குறிக்கும் புறங்கூற்று, ஒருவரின் பதவியை அல்லது வேலையைப் பொறாமையால் அல்லது தன்னலத்தால் வெஃகி அதைப் பறிப்பதற்கு நிகழ்வதாயிருத்தலால், அதைக் கண்டித்தற்குப் புறங்கூறாமை வெஃகாமையின் பின் வைக்கப்பட்டது.

181. அறங்கூறா னல்ல செயினு மொருவன்
புறங்கூறா னென்ற லினிது.

(இ-ரை.) ஒருவன் அறம் கூறான் அல்ல செயினும் - ஒருவன் அறம் என்னுஞ் சொல்லையுஞ் சொல்லாது அறமல்லாதவற்றைச் செய்யினும்; புறங்கூறான் என்றல் இனிது - ஒருவரையும்பற்றிப் புறங்கூறான் என்று உலகத்தாராற் சொல்லப்படுதல் நன்றாம்.

புறங்கூறாமை அக் குற்றங்களினும் மேம்பட்டுத் தோன்றும் என்பதாம்.

182. அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே
புறனழீஇப் பொய்த்து நகை.

(இ-ரை.) புறன் அழீஇப் பொய்த்து நகை - ஒருவனைக் காணாவிடத்துப் பழித்துரையால் அழித்துக் கூறிக் கண்டவிடத்து அவனோடு பொய்யாகச் சிரித்து முகமலர்தல்; அறன் அழீஇ அல்லவை செய்தலின் தீது - அறம் என்றே ஒன்றுமில்லையென அழித்துக் கூறி அறமல்லாதவற்றைச் செய்தலினுந் தீயதாம்.