உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தேவநேயப் பாவாணரின்
திருக்குறள் தமிழ் மரபுரைச் சிறப்புப் பாயிரம்

பத்துரைக்கு மேலும் பரிமே லழகரோ
டொத்தவுரை நூறுசெய்தும் ஒன்றாமே – மெத்ததிரு
வள்ளுவனார் நூலுக்கு வாய்மை உரைசெய்தார்
தொள்ளுதமிழ்ப் பாவாணர் தேர்ந்து. 1

நுண்ணிய நூலறிவும் நுண்மாண் நுழைபுலமும்
திண்ணிய கேள்வியுந் தீர்தலால் – எண்ணிய
தெய்வத் திருக்குறட்குத் தேவநே யன்செய்நூல்
உய்யக் கிடைத்த வுரை. 2

ஆர்ந்த தமிழ்மொழியோ டாரியமும் ஆங்கிலமும்
ஏர்ந்த பிறமொழியும் ஏய்வுறவே – ஊர்ந்தமதித்
தேவநே யன்செய் தெளிந்த குறளுரையால்
காவனே ருற்றதெனக் காண். 3

சொல்லும் பொருளுந் தொகவாய்ந்து தொல்வரலா
றொல்லும் பலவகையா லோர்ந்துணர்ந்து – வெல்லும்
படியுரைத்த பாவாணர் பாரித்த வாற்றற்
கடியுரைத்தல் யார்க்கும் அரிது. 4

இனம்பேணற் கென்றெழுந்த வின்குறட்குத் தந்தம்
மனம்போன வாறு மயங்கிப் – புனைந்துரைத்த
பான்மை தவிர்த்துநூற் பாங்குரைத்தார் பாவாணர்
மேன்மை பிறங்கிற்று மேல். 5

நரிசூ லுறவரிமா நல்கிதென்றே யற்றைப்
பரிமே லழகர் பயந்துரைத்தார் – ஒற்றைப்
புரிமேல் கரிநடந்த பொய்யைப்பா வாணர்
எரிமே லெறிந்தா ரிகழ்ந்து. 6