உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/196

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

திருக்குறள்

தமிழ் மரபுரை


துணிவுக்கடுமையும் அதற்குக் கழுவாயின்மையும் நோக்கிக் 'குற்றப்படின்' என்றுங் கூறினார்.

273. வலியி னிலைமையான் வல்லுருவம் பெற்றம்

புலியின்றோல் போர்த்துமேய்ந் தற்று.

(இ-ரை.) வலி இல் நிலைமையான் வல் உருவம் - மனத்தை யடக்கும் வலிமையில்லாத இயல்பினன் வலிமை மிக்க துறவியரின் தவக்கோலத்தைப் பூண்டு கூடாவொழுக்கம் ஒழுகுதல்; பெற்றம் புலியின் தோல் போர்த்து மேய்ந்த அற்று - ஆவு கொல்லைக் காவலர் துரத்தா வண்ணம் புலியின் தோலைப் போர்த்துப் பயிரை மேய்ந்தாற் போலும்.

அதிகாரத்தாலும் உவமையாலும் கூடாவொழுக்கம் என்பது வருவித்துரைக்கப்பட்டது. ஆவையுடையார் அதற்குப் புலியின் தோலைப் போர்த்துப் பிறர் கொல்லையில் மேய விடுதலுங் கூடுமாதலின், இவ் வுவமை இல்பொருளுவமை யாகாது. "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது" என்னுங் கருத்தினாலும், "புலியடிக்கு முன் கிலியடிக்கும்" ஆதலாலும், புனங்காப்போர் புலியை அண்டுவதில்லை. அங்ஙனமே, தவத்தோர் தவறு செய்யார் என்னும் நம்பிக்கையினாலும், தவத்தோரை அணுகின் சாவித்துவிடுவர் என்னும் அச்சத்தாலும், மக்கள் தவக்கோலத்தாரிடம் நெருங்குவதில்லை. புலித்தோற் போர்த்த பெற்றம் பிறர் புலங்களில் மறைவாக மேய்வது போல, கூடாவொழுக்கத்தானும் பிறர்க்குரிய பெண்டிரொடு கூடிக் களவாகவும் கள்ளத்தனமாகவும் இன்பம் நுகர்வான் என்பது பெறப்பட்டது.

274. தவமறைந் தல்லவை செய்தல் புதன்மறைந்து

வேட்டுவன் புட்சிமிழ்த் தற்று.

(இ-ரை.) தவம் மறைந்து அல்லவை செய்தல் - மனத்தையடக்கும் வலிமையில்லாதவன் தவக்கோலத்தின்கண் மறைந்து நின்று கூடாவொழுக்கம் ஒழுகுதல்; வேட்டுவன் புதல் மறைந்து புள் சிமிழ்த்த அற்று - வேடன் புதரின்கண் மறைந்து நின்று பறவைகளை வலையாற் பிணித்தாற் போலும்.

'தவம்' ஆகுபொருளது.

275. பற்றற்றே மென்பார் படிற்றொழுக்க மெற்றெற்றென் றேதம் பலவுந் தரும்.