உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 1.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அறத்துப்பால் - துறவறவியல் - நிலையாமை

205



குடம்பை என்னும் சொற்குச் சேக்கை (பறவைக்கூடு), முட்டைக்கூடு, புழுக்கூடு என முப்பொருள்கள் உள.

"வரியுடல் சூழக் குடம்பைநூல் தெற்றி” எனக் கல்லாடம் (கணபதி துதி.29ஆம் வரி) புழுக்கூட்டைக் குறித்தது. “குடம்பை முட்டையுங் கூடு மாகும்" என்பது பிங்கலம் (10: 353).

குறளிலுள்ள குடம்பையென்னும் சொற்குப் பறவைக்கூடு என்று மணக்குடவ பரிதி காலிங்கரும், முட்டைக்கூடு என்று பரிமேலழகரும் - பொருள் கொண்டனர். இவர் இங்ஙனம் வேறுபடக் கரணியம் இரண்டிற்கும் குடம்பை, கூடு என்பன பொதுப்பெயரா யிருப்பதும், உயிர் உடம்பினின்று பிரிந்துபோவதற்குப் பறவை தன் கூட்டை விட்டுப் பிரிந்து போய்விடுவதை நாலடியார்ச் செய்யுளொன்று உவமங் கூறியிருப்பதுமாம். ஆயின், திருக்குறள் மாந்தனுயிரையே சிறப்பாகக் கருதினாலும், தாய்ப்பாலுண்ணிகட் கெல்லாம் (mammalia) பொதுவான உயிரையும் அதன் உடம்பையுமேபற்றிக் கூறியிருக்க, நாலடியார்ச் செய்யுள் மாந்தனுயிரையும் அவனுடம்பையுமேபற்றிக் கூறியதுடன், அவன் பிறந்த குடும்பத்தையுஞ் சேர்த்துக் கூறியுள்ளது. இதுவே உவம வேறுபாட்டிற்குக் கரணியாம்.

"கேளாதே வந்து கிளைஞரா யிற்றோன்றி
வாளாதே போவரான் மாந்தர்கள் - வாளாதே
சேக்கை மரனொழியச் சேணீங்கு புட்போல
யாக்கை தமர்க்கொழிய நீத்து' (நாலடி.30)

என்பது அந் நாலடியார்ச் செய்யுள்.

இதன் பொருள்: மாந்தர் ஒரு குடும்பத்தில் ஒருவரை யொருவர் கேளாமலே உறவினராக வந்து பிறந்து, பின்பு தாம் இறக்கும் போதும், பறவை மரத்தில் தான் கட்டிய கூட்டை விட்டுவிட்டு அம் மரத்திற்குச் சொல்லாமலே நெடுந்தொலைவு நீங்கிச் சென்றுவிடுவதுபோல, தம் உறவினருக்குச் சொல்லாமலே தம் உடலை அவரிடம் விட்டுவிட்டுச் சென்றுவிடுவர் என்பதாம்.

பறவை மரத்தைக் கேளாமலே வந்து அதில் தான் முட்டையிட்டுக் குஞ்சுபொரித்தற்குக் கட்டிய கூட்டை. அவ் வினை முடிந்தபின் விட்டுவிட்டு அம் மரத்திற்குச் சொல்லாமலே நீங்கிப் போய்விடுவதுபோல, மாந்தரும் தம் பழவினையின் ஒரு பகுதியான இருவினைப் பயனை நுகர்தற்குத் தாம் எடுத்த