பண்டைத் தமிழ்ப் பண்பாடு
159
பெண்டிர் தம் வீட்டு முற்றத்திற் கோல மிடுவதற்கு அரிசு மாவைப் பயன்படுத்தியது, எறும்பிற்கு உணவாதற் பொருட்டாகும்.
தமிழர் எல்லாரும் பொதுவாக அஃறிணையுயிரிகளிடத்து அன்பு காட்டி வந்தனர். வீட்டில் வளர்ப்பனவும் மிகப்பயன்படுவனவும் கண்ணிற் கினியனவுமான நிலைத்திணை (தாவரம்) ஓடுயிரி பறவை முதலிய வற்றைப் பிள்ளைகளைப் போன்றே பேணினர். அதனால் அவற்றின் இளமைக்குப் பிள்ளைப் பெயர் தோன்றியதோடு, அவற்றைப் பிள்ளைப் பேறில்லாதவர்கள் பிள்ளைகளாகவே கருதி வளர்க்கும் வழக்கமும் ஏற்பட்டது. "இருக்கும் பிள்ளை மூன்று, ஓடும் பிள்ளை மூன்று, பறக்கும் பிள்ளை மூன்று." என்பது பழமொழி. தென்னம் பிள்ளை போன்றது இருக்கும் பிள்ளை; கீரிப்பிள்ளை போன்றது ஓடும் பிள்ளை; கிளிப் பிள்ளை போன்றது பறக்கும் பிள்ளை.
மாடு வளர்ப்பவர்கள், சிறப்பாக உழவரும் இடையரும், காளைக்கும் ஆவிற்கும், முறையே, சாத்தன், சாத்தி, முடக் கொற்றன் முடக்கொற்றி, கொடும் புற மருதன் கொடும்புற மருதி முதலிய மக்கட் பெயர்களையே இட்டு வழங்கினர். அதனால், அவை இருதிணைக்கும் பொதுவான விரவுப்யெர் வகையாக இலக்கணத்திலும் இடம் பெறலாயின. (தொல் சொல். 20-29)
பொங்கற் பண்டிகையில் மாடுகட்கும் ஒரு நாளை ஒதுக்கி, அவற்றிற்கு அழகிய அணிகளைப் பூட்டிச் சிறந்த உணவூட்டி மாட்டுப் பொங்கல் எனக் கொண்டாடுவது வழக்கம்.
எல்லாரும் வாழ வேண்டுமென்பது தமிழர் பொது நோக்கம்.
பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்கென வாழ்த்தி”
விழாத் தொடங்குவதும்,
பாரக மடங்கலும் பசிப்பிணி யறுகென
ஆதிரை யிட்டனள் ஆருயிர் மருந்தென்”
என்னும் மணிமேகலைக் கூற்றும் (16:134-5).
எல்லாரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லால் வேறொன் றறியேன் பராபரமே"
(LDA. 2: 70-71)
என்னும் தாயுமானவர் பராபரக் கண்ணியும் (221) தமிழரின் பொதுநல நோக்கைத் தெளிவாய்க் காட்டும்.
பிறப்பால் சிறப்பில்லை யென்பதும், மாந்தர் எல்லாரும் ஓரினம் என்பதும் பண்டைத் தமிழர் கொள்கைகளாம். தொழில் பற்றிய வகுப்பே தமிழர் குலப்பிரிவாகும்.