உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 29.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குமரிநிலையியல்

29

னாலும், போர்த் தொடக்கத்திற் கொற்றவை வழிபாடு இன்றியமை யாததாயிற்று.

"மறங்கடைக் கூட்டிய துடிநிலை சிறந்த

கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே

(புறத்.4)

என்று, தொல்காப்பியம் கூறுதல் காண்க. இங்ஙனம் காளிவணக்கம் பொதுவியலும் வேத்தியலு மாயிற்று.

தெய்வமேறி யாடுபவர், ஆடவராயின் தேவராளன், மருளாளி யென்றும்; பெண்டிராயின் தேவராட்டி, சாலினி என்றும், பெயர் பெறுவர். காளி பெண்தெய்வ மாதலின், அணங்காடுபவள் பெரும் பாலும் சாலினியே யென்பது, 'வேட்டுவ வரி'யால் அறியக் கிடக்கின் றது. மருளாளியும் சாலினியும், ஆடுகளின் அல்லது ஆட்டுக் குட்டி களின் பச்சை யரத்தத்தைக் குடிப்பது முண்டு.

சேவல், ஆட்டுக்கடா, எருமைக்கடா ஆகியவை, காளிக்குக் காவு கொடுக்கப்பட்டன.

ஆரியர் வருமுன்னரே தமிழர் வடநாட்டிற் போய்ப் பரவி யிருந்ததனால், வங்கநாட்டிற் காளிக்கோட்டம் கட்டப்பட்டது. அதன் பெயரே அஃதுள்ள நகருக்குமாகி, இன்று ஆங்கில வழியாய்க் கல்கத்தா என்று திரிந்து வழங்குகின்றது.

காளி கடுஞ்சினத் தெய்வமாகக் கருதப்பட்டதனால், அலகு குத்துதல், உருமத்தில் உருண்டு வலம்வரல், தீமிதித்தல், செடிற் குத்துதல் (hook-swinging) முதலிய அஞ்சத்தக்க முரட்டு வினைகள் பத்திச் செயல்களாக நேர்ந்துகொள்ளப்பட்டன.

காவல் தெய்வம்

ஒவ்வொரு தீவிற்கும் ஊருக்கும் ஒரு காவல் தெய்வம் இருந்தது. நாவலந் தீவிற்குச் 'சம்பாபதி' என்னும் நாவல் மகளும், மதுரைக்கு மதுராபதியும் காவல் தெய்வம். நாவல் தெய்வ இருக்கை காவிரிப்பூம் பட்டினமென்று மணிமேகலை கூறுவதால், சோழ நாடு முதற்காலத்திற் பனிமலைவரை பரவியிருந்தமை உய்த்துணரப் படும்.

அரசர் சிலர் ஒவ்வொரு பூதத்தைத் தமக்குக் காவல் செய்ய அமர்த்தியிருந்தனர். முசுகுந்தச் சோழன் காவற்பூதப் படிமை, புகார் நடுச் சதுக்கத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. முனியன் என்பது காவற் பூதங்களுள் ஒன்று.

எல்லம்மன், எல்லைக் கறுப்பன் என்பன சிற்றூர்க் காவல்

தெய்வங்கள்.