உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 38.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




56

சென்னைப் பல்கலைக் கழக தமிழகராதியின் சீர்கேடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தமிழாராய்ச்சியாளராக விருந்த பேராசிரியர் இரா. இராகவையங்காரும் சமற்கிருதப் பேராசிரியராகவிருந்த பர். சுப்பிரமணிய (சாத்திரியா)ரும், தாம் எழுதியுள்ள நூல்களில் உண்மைக்கு மாறாகத் தமிழை எத்துணையோ ஆழ்த்தியும் தாழ்த்தியும் கூறியுள்ளனர். ஆயினும்,அவரைத் தடுக்கவோ விடுக்கவோ எத்தமிழ்ப் பேராசிரியர்க்கும் எள்ளளவும் உரமில்லாது போயிற்று. முப்பதாண்டுகளாக இரவும் பகலும் அரும்பாடுபட்டுத் தமிழாராய்ந்து,உள்ளதை உள்ளவாறு கூறிய எனக்கோ, இல்வாழ்க்கைக்கும் இடமில்லாதபடி தமிழரே, அதுவும் தமிழ்ப்பேராசிரியரே,வலுத்த முட்டுக்கட்டையிட்டனர். கால்டுவெலும் மாக்கசுமுல்லரும் செசுப்பர்சனும் இத்தகைய கட்டுப்பாட்டிற்கும் முட்டுப்பாட்டிற்கும் ஆளாயிருந்திருப்பின், அவர் மனநிலை எங்ஙன மிருந்திருக்கும் என்பதை எண்ணிக் காண்க.

ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இவ் விருபதாம் நூற்றாண்டிலும், பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மார் தமிழைக் காட்டிக்கொடுத்துப் பட்டமும் பதவியும் பெயரும் புகழும் பாராட்டும் பரிசும் பெறுவாராயின், பிராமணர் நிலத்தேவரென்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழியென்றும் முற்றும் நம்பப்பட்டிருந்த பண்டைக்காலத்தில், தமிழ் நிலையும் தமிழன் நிலையும் தன்மானத் தமிழ்ப் புலவன் நிலையும் எத்துணைத் தாழ்ந்திருத்தல் வேண்டு மென்பதை, கடுகளவேனும் பகுத்தறிவுள்ளார் உய்த்துணர்ந்து கொள்க.

·

பர். சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமணவாசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாய்க் கற்ற வங்காளியர். அவர் தமிழறிவு எத்தகைய தென்பது அடுத்த படலத்தில் விளக்கப் பெறும்.

பர். கத்தரே ஒரு சமற்கிருத வெறியரான கொங்கணிப் பிராமணர். தமிழ்ப் பெருமையைச் சற்றும் அறியாதவர்.

பேராசிரியர் சீகண்டையா ஒரு கன்னடப்பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் பெரும்புலவர்; என் திராவிடமொழி யாராய்ச்சித் துறையொடு தொடர்புள்ளவர். வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுநரான சட்டர்சிக்கும், கொங்கணியிலும் சமற்கிருதத்திலும் வன்புலவரான கத்தரேக்கும் தமிழொடு என்ன தொடர்பு? ஆரியமொழிகட்குள் மட்டுமன்றி இந்திய மொழிகட்குள்ளும் சமற்கிருதத்தைத் தலைமையாகக் கொண்ட இவ் விருவரொடும்,(தமிழைத் தலைமையாகக் கொண்ட) நான் விரைந்து முட்டுவேன் என்பதும், அதனால் என் பணி முட்டுப்படும் என்பதுமே,இவ் விருவரையும் முறையே மேற்பார்வைக் குழுத் தலைவராகவும் துணைத்தலைவர் போன்றும் அமர்த்தியவர் எதிர் பார்த்தவை. அவ் வெதிர்பார்ப்பு அண்மையிலோ பின்னரோ நிறைவேறும் என்பதும் எனக்குத் தெரியும்.