உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 41.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




58

இலக்கணக் கட்டுரைகள்

'குற்றிய லிகரமும் குற்றிய லுகரமு

மற்றவை தாமே புள்ளி பெறுமே’

என்பது சங்க யாப்பாகலின் என்பது யாப்பருங்கல விருத்தி (ப. 27).

மேற்கூறியவற்றால், குற்றியலிகர குற்றியலுகரங்கள் பண்டைக் காலத்தில் புள்ளியிட் டெழுதப்பட்டனவென்றும் அங்ஙனம் எழுதினது அவற்றின் ஒலிக்குறுக்கத்தையும் ‘நாடியாது', 'எட்டியாண்டு' முதலிய புணர் மொழிப் பொருள் வேறுபாட்டையும் காட்டற்கு என்றும் அறியப்படும்.

'நாடியாது', 'எட்டியாண்டு' என்பன, நாடி யாது, எட்டி யாண்டு என்றும் பொருள்படுமாதலின், அவை நாடு + யாது, எட்டு + யாண்டு என்னும் புணர்மொழிகள் என்று காட்டற்குக் குற்றியலிகரத்தின்மேற் புள்ளியிடப் பட்டதென்க.

குற்றுகரத்தை மேற்சுன்னமிட்டுக் காட்டுவது இன்றும் மலையாள (சேர) நாட்டு வழக்கம். குற்றிகர குற்றுகரங்கள் புள்ளி பெறுமென்று நன்னூலிற் கூறப்படாமையால், 12ஆம் நூற்றாண்டிற்கு முன்பே இவ் வழக்கு, சோழ பாண்டிய நாடுகளில் ஒழிந்தது என்பதை அறியலாம். எகர ஏகாரங்கட்கும் ஒகர ஓகாரங்கட்கும் அவை சேர்ந்துள்ள உயிர் மெய்கட்கும் வரி வேறுபாடு தொல்காப்பியத்திலே கூறப்பட்டிருப்பினும் 17ஆம் நூற்றாண்டில் அவ் வெழுத்துகள் குறில் நெடில் வேறுபாடின்றி எழுதப் பட்டாற்போல, குற்றியலுகரமும் வேறுபாடின்றி யெழுதப்பட்ட தென்க.

ஒரு பொருள் குறுகின் அப் பொருளேயன்றி வேறுபொரு ளாகாது; அதன் குறுக்கம் அளவு வேறுபாடேயன்றிப் பொருள் வேறுபாடன்று. அதுபோல், குற்றியலுகரமும், முற்றியலுகரம் போல உயிரேயன்றி மெய்யாகாது. இதனாலேயே,

இகர உகரங் குறுகிநின்றன, விகாரவகையாற் புணர்ச்சி வேறு படுதலின், இவற்றை இங்ஙனங் குறியிட்டாளுதல் எல்லார்க்கும் ஒப்ப முடிந்தது. சந்தனக்கோல் குறுகினால் பிரப்பங் கோலாகாது அது போல உயிரது குறுக்கமும் உயிரேயாம். இவற்றைப் புணர்ச்சி வேற்றுமையும் பொருள் வேற்றுமையும்பற்றி வேறோர் எழுத்தாக வேண்டினார்” நச்சினார்க்கினியரும். பொருள் வேற்றுமை யென்றது பண்டைக் காலத்தில் கட்டு கொட்டு முதலிய சொற்கள் ஏவல் வினையாம் போது முற்றுகர வீறாயும் முதனிலைத் தொழிற்பெயராம்போது குற்றுகர வீறாயும், ஒலிக்கப்பட்டவை நோக்கி, “தருக்கு அணுக்கு என்பன வினைக்கண் வந்த முற்றுகரம்." (தொல். 36, உரை) “காது கட்டு கத்து முறுக்கு தெருட்டு என்பன முற்றுகரமும் குற்றுகரமுமாய்ப் பொருள் வேறுபட்டு நின்றாற் போல” (தொல். 68, உரை). என்று நச்சினார்க்கினியர் கூறுதல் காண்க. தொல்காப்பியர் தம் காலத்தில் குற்றுகரமும் மெய்போலப் புள்ளி பெற்றதனாலேயே, புணரியலில்,