உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 44.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை




6

எல்லாராய்ச்சியும் சொல்லாராய்ச்சியா?

மக்கள் அறிவடையும் வழிகள், கல்வி, கேள்வி ஆராய்ச்சி துய்ப்பு என நால் வகைப்படும். ஒருவர் பிறர் எழுதி வைத்ததைத் தாமாய்க் கற்றறிவது கல்வி; அங்ஙனமன்றி அறிஞரையடுத்துத் தமக்கு வேண்டியவற்றைக் கேட்டறிவது கேள்வி; இவ்விரண்டுமன்றி, ஒன்றைப் புதுவதாகத் துருவி யாய்ந்தறிவது ஆராய்ச்சி; இனி வாழ்நாளில் பற்பல வகையில் தாமே துய்த்து அறிவது துய்ப்பு, (அனுபவம்) இவற்றில் கல்வி என்பது இக்காலத்தில் கேள்வியையுந் தழுவும்.

ஆராய்ச்சி ஆராயப் பெறும் பொருள் நோக்கிப் பலதிறப்படும். அவற்றுள் சொல்லாராய்ச்சியும் ஒன்று. அது மொழியாராய்ச்சியுட்பட்டது. ஒரு மொழிக்குட்பட்ட சொல்லின் அல்லது சொற்களின் வரலாற்றை ஆய்வது சொல்லாராய்ச்சி; ஒரு மொழிக்குப் பிற மொழியோடு அல்லது மொழிகளோடு உள்ள தொடர்பை ஆய்வது மொழியாராய்ச்சி. மொழிகளெல்லாம் பெரும் பாலும் சிலவும் பலவுமாய்த் தம்முட் தொடர்பு கொண்டிருப்பதால், மொழி யாராய்ச்சியில்லாதார் செய்யும் சொல்லாராய்ச்சி கட்டுப்படுவதே.

சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் ஒருவர் முதற்கண், ஏதேனுமொரு மேலை மொழியில், சிறப்பாக ஆங்கிலத்தில், உள்ள மொழி நூல்களையும் சொல்லாராய்ச்சி நூல்களையும் சொல்லியலகராதிகளையும் கற்றல் வேண்டும். அங்ஙனம் கற்கும் போதே, மொழியொலியியல் (phonology), சொல் வடிவியல் (Morphology), பொருட்பாட்டியல் (Semasiology) முதலிய மொழி நூற்றுறைகளைச் செவ்வன் உணர்ந்துகொள்ளுதல் வேண்டும். அதன்பின் சொல்லாராய்ச்சி செய்ய விரும்பும் மொழியின் இலக்கணத்தைக் கற்பதுடன், அதிலுள்ள சொற் குடும்பங்களையெல்லாம் தனித்தனியாகவும் தொகுதி தொகுதியாகவும் நோக்கி, அவற்றின் தொடர்புகளை அறிந்து கொள்ளுதல் வேண்டும். பின்னர் அம்மொழிச் சொற்களை அம்மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிற மொழிச் சொற்களோடும் அக்குடும்பத்தையடுத்த அயற் குடும்ப மொழிச் சொற்களோடும் ஒப்புநோக்கிக் காட்டல் வேண்டும். சொல் லாராய்ச்சிக்குச் சொல் வரிசைகளை ஒப்பு நோக்குவதினும், இலக்கண நெறி முறைகளை ஒப்பு நோக்குவதே மிகுதியும் வேண்டப் பெறுவதாகும்.