உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாவாணர் தமிழ்க் களஞ்சியம் 8.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32

(பிங்.)

முகில் துளி சிந்தியே மக்கட்குக் கீழ்நீரும் மேல்நீரும் ஆற்றுநீரும் கிடைத்தலால், சிந்து என்னுஞ் சொற்கு நீர் (பிங்.), ஆறு என்னும் இருபொருளும் ஏற்பட்டன.

இனி, சிந்துதல் என்னும் வினைச்சொற்குத் தெளித்தல் என் பதனொடு ஒழுகுதல் என்னும் பொருளுமிருத்தலால், சிந்து என்னுஞ் சொல் ஓர் ஆற்றின் பெயராவதற்கு முற்றும் பொருத்தமானதே. வடமொழியில் இச் சொற்கு மூலமில்லை. மானியர் உவில்லியம்சு தம் சமற்கிருத-ஆங்கில அகரமுதலியில், ஒருகால் சித் (sidh) என்பது மூலமா யிருக்கலாம் என்று ஐயுறவாகக் குறிப்பர். அச் சொற்குச் செல்லுதல் (to go) என்னும் பொருளே உள்ளது. மேலும், இருக்கு வேதத்தில் சிந்தாற்றிற்குச் சரசுவதி யென்னும் பெயரே வழங்கப் பட்டிருப்பதாகத் தெரிகின்றது. பிற்காலத்தில் ஆரியர் பிரமவர்த்தம் சென்ற பின்னரே, அந் நிலப் பகுதிக்கு மேலெல்லையாகவும் சட்டிலெசு என்னும் கிளையாற்றிற்குத் துணைக்கிளையாகவும் இருந்த சிற்றாற்றிற்கு, அப் பெயரை இட்டதாகத் தெரிகின்றது. அது இன்று சுர்சூதி (Sursooty) என்று வழங்குகின்றது.

பழம்பாரசீகரின் சொராத்திரிய (Zoroastrian) வேதமாகிய செந்துஅவெத்தாவில் (Zend-Avesta), ஹப்த ஹைந்தவ என்பது அகுரமத்தாவினாற் படைக்கப்பட்ட பதினாறு தெய்வங்களுள் ஒன்றாகக் கூறப்பட்டிருப்பதனாலும், ஹாக்வைதி (Haraquaiti) என்பது ஓர் ஆபுக்கானிய ஆறாகக் குறிக்கப்பட்டிருப்பதனாலும், பல தெய்வங்கள், சிறப்பாக அக்கினி, சொராத்திரியர்க்கும் இருக்கு வேதியர்க்கும் பொதுவாயிருப்பதனாலும், அவ்விரு வகுப்பாரும் ஒருகாலத்திற் சிந்துவெளியில் ஓரினத்தாரும் ஒரே மதத்தாருமாய் வாழ்ந்திருந்து, பின்னர் முன்னவர் மேற்கும் பின்னவர் கிழக்குமாகப் பிரிந்து போயினர் என்பது உய்த்துணரப்படும்.

சகரம் அல்லது ஸகரம் பாரசீகர் வாயில் ஹகரமாகத் திரியும். எ-டு:

சிந்து (ஸிந்து) - ஹிந்து

ஸப்தன் (ஏழு) - ஹிப்தன்

அசுரன் (அஸுர) - அஹுர

இம் முறையிலேயே, ஸப்தஸிந்து என்பது ஹப்தஹிந்து என்றும், ஸரஸ்வதி என்பது ஹரக்வைதி என்றும் திரிந்துள்ளன.

இதனால், சிந்தாறு ஒருகாலத்தில் எழுகிளைகள் கொண் டிருந்ததாகத் தெரிகின்றது. சிந்தாற்றுத் தேவிக்கு ஏழ் உடன் பிறந்தாண்மார் (sisters) என்ற இருக்குவேதியர் கொள்கையினாலும் இது வலியுறும்.