பக்கம்:புகழ்பெற்ற புதுக்கவிஞர்கள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புகழ்பெற்ற புதுக் கவிஞர்கள்119

அந்தக் குரலால்
பேச விரும்பவில்லை.
அதை
நான் ஒரு
மோதிரமாகச் செய்வேன்.
என் மெளனம்
தனது பிஞ்சுவிரலில்
அதை அணிந்து கொள்வதற்காக...
அந்தத் குழந்தை
ஒரு நீர்த் துளியில்
தனது குரலைத
தேடிக் கொண்டிருந்தது.
சிறைப்பட்ட
அந்தக் குரல்
சிறிது தொலைவில்
சிள்வண்டுப் போர்வைக்குள்
ஒளிந்து கொண்டிருந்தது.

ஊமைக் குழந்தையால் பேச முடியாது. அது தன் குரலைத் தொலைத்துவிட்டுத் தேடித் திரிவதாகவும், சிள்வண்டு அதை எடுத்து ஒளித்துவைத்துக் கொள்வதாகவும் பாடும் லார்காவின் கற்பனையில் பாதிக்கனவும், பாதிக்குறும்புத் தனமும் தென்படுகின்றன. கனவு காண்பது போல், இந்த இனிய கற்பனை இருந்தாலும், அதனால் புலப்படுத்தப்படும் பரிதாபமான உண்மை (குழந்தையின் ஊமைத்தனம்) நம் உள்ளத்தைத் துளைக்கிறது.

இத்தகைய கனவுநிலைப் பாடல்களை லார்கா ஏன் பாடினான் என்று சிலசமயங்களில் படிப்பவர்கள் விழிப்பதுண்டு. அதைப் படிக்கும் போது, நாமும் ஏதோ ஓர் இனம்புரியாத கனவு மயக்கத்தில் இருப்பது போலத்தான் தோன்றும். ‘கிரானடாவும் 1850—ம்’ (Granada and 1850) என்ற பாடலைப் படிக்கும்போது அத்தகைய மயக்கத்தை நம்மையறியாமல் பெறுகிறோம்.

என் அறைக்குள்ளிருந்து
ஓர் ஊற்று
கிளம்பி வருவதை
உணர்கிறேன்.
ஒரு—
திராட்சைத்
தளிர்க் கொடியும்
சூரியனின்
ஒளிக்கற்றையும்
தெரிகின்றன.</poem>