பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ராஜம்கிருஷ்ணன்

39

தரந்தாழ்த்துதலும் கற்பிக்கும் பாடப்புத்தகங்கள் திருத்தி அமைக்கப்பட வேண்டும்.

இறையுணர்வு, ஒரு மனிதரின் நல்லொழுக்கத்துக்கு அடிநாதமாக இருந்து வருகிறது. இந்த உணர்வு, ஒரு தனிச் சமயச் சொத்தாகக் கற்பிக்கப்படாமல், உலகனைத்தும் பரந்த உயிர்களிடத்துக் காட்டும் நேயமாக, சக மனிதரை எக்காலத்தும் நேசிக்கும் மனிதாபிமானமாக, உயர் பண்புகளை மனதில் பதிய வைக்கும் வாசகங்கள் - பல சமயங்களில் இருந்தும் எடுத்துக் கோக்கப்பட்ட மணிக்கோவைகள், இன்ன சமயம் என்ற வண்ண பேதம் கற்பிக்கப்படாத நிலையில் ஒழுக்கக் கல்விப் பாடங்களாக அமைய வேண்டும். இந்த ஒழுக்கமே வருங்காலக் குடிமக்களின் வாழ்வுக்கு ஆதார சுருதியாக அமையும்.

பெற்றோரும், ஆசிரியருமே வருங்கால சந்ததியினரின் முன்மாதிரிகளாக இளம் மனங்களில் பதிந்து போகின்றனர். எனவே, இளம் பருவத்திலும், பின்னர் எழுச்சிமிகுந்ததாக வளர்ச்சி பெறும் குமரப்பருவத்திலும், பெற்றோர், ஆசிரியர் காட்டும் அன்பும், நட்பும், குணநலன்களுமே பிள்ளைகளின் சீரான மலர்ச்சிக்கு உத்தரவாதமாகத் திகழ்கின்றன. சண்டையிடும் பெற்றோரும், ஒருவரை மற்றவர் ஏமாற்றும், பொய் சொல்லும் வழக்கங்களும், மது, சூது, போன்ற தீமைகளும், நல்ல பிள்ளைகளை உருவாக்க முடியாத தடைக்கற்கள் எனலாம். சமூகக் கொடுமைகளான தீண்டாமை, பெண்ணடிமைத்தனம், வன்முறைகள் ஆகியவை எந்தக் குடும்பத்திலும் தலைகாட்டலாகாது. ஆசிரியர், புகைபிடிப்பதும், மதுவருந்துவதும், வசைச் சொற்கள் பொழிவதும், பிள்ளைகளையும் அதே வழிக்கு இட்டுச் செல்லும்.