பக்கம்:புதியதோர் உலகு செய்வோம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
3. அழிவைத் தடுத்து நிறுத்தும் ஆற்றல்

‘ஒடும் ரயிலில் பெண் போலீஸை வெட்டி நகைப் பறிப்பு’ ‘பெண்ணிடம் சங்கிலி பறிப்பு’... ‘பல் வலி தாங்காமல் மனமுடைந்த பெண், மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீக்குளித்தாள்’... ஒரே நாளில் வெளிவந்த இச்செய்திகள் பெரிதும் சிந்திக்க வைத்தன. சாதாரணமான பெண்ணிடம் நகைபறிப்பு செய்தியில் இல்லாத முக்கியத்துவம், ‘பெண் போலீஸிடம் நகை பறிப்பு, வெட்டும் கொடுமை’ ஆகிய இரண்டு அழுத்தங்கள், இன்றைய பெண்களை நோக்கி அறைகூவல் விடுவதாகத் தோன்றுகின்றன. பல் வலி தாங்காமல் மனமுடைந்த பெண், இரு குழந்தைகளுக்குத் தாய், கணவரிடம் சொல்ல, பொழுது விடிந்து மருத்துவமனைக்குச் செல்லலாம் என்று சொன்னார். ஆனால் அவள் தீக்குளித்தாள். அடுப்பெரிக்க மண்ணெண்ணெய்க்கு அதிக விலை கொடுத்தாலும் கிடைக்காத நடப்பியல் வாழ்வில், உயிர்கள் இத்துணை மலிவாகப் போய்விட்டனவா? தீக்குளியல்கள், சர்வ சாதாரணமான செய்திகளாக வருகின்றன. மிகவும் பழகிய செய்தியாக, தொலைக்காட்சித் தொடர்களில், குடும்பங்களில், மாமியார் மண்ணெண்ணெய் ஊற்றி மருமகளை எரிப்பதும் பிள்ளையே பிறக்காது என்று ஒரு (பெண்) டாக்டர் சொல்லிவிட்டதனால், திருமணமான பெண் தீக்குளிப்பதும் பழக்கமானவை. தொலைக்காட்சியின் பயங்கரங்கள் ‘வெறும் பொய்கள்’ என்று மரத்துப்போகச் சமாதானம் செய்து கொண்டாலும் பத்திரிகைச் செய்திகள் உறுத்தலை ஏற்படுத்துகின்றன.