உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



4


மா
னேஜரின் அறையில் பாதிக்கதவு மூடப்பட்டு, மீதிப் பாகத்தை தையல் ஆசிரியன் பெருமாள், தன் முதுகை வைத்து மறைத்துக்கொண்டிருந்தான் என்றால், உள்ளே தங்கப்பாண்டிக்கும் இந்திராவுக்கும் ‘அந்தரங்கமான’ ஆலோசனை நடப்பதாக அர்த்தம். மானேஜரைப் பார்த்துவிட்டு, ‘ஜி.பி.எப்.’ பணத்துக்கு விண்ணப்பம் கொடுக்கப்போன கனகம், பாதி வாசலை மறைத்த பெருமாளைப் பார்த்துவிட்டுத் திரும்பி வந்துவிட்டாள். அவளுக்கு உள்ளூற உதறல். நேற்று ‘ஏலத்துல பணம் கொடுக்கணுமுன்னா, பேங்க்ல போட்டிருக்கிற பணத்தை எடுத்து கொடுக்கது. நம்ப சம்பளந்தானா கிடைச்சுது?’ என்று இந்திரா காதுபடச் சொல்லிவிட்டாள். இந்நேரம், அவளோ, தங்கப்பாண்டியின் காதில், வாய்ப்பட சொல்லிக்கொண்டிருப்பாள். ஜி.பி.எப். கடன் கிடைச்சது மாதிரிதான்... வயித்துக் கட்டியை ஆபரேஷன் பண்ணுனது மாதிரித்தான்.

அவள் நினைத்தது உண்மை என்பது மாதிரி உள்ளே உரையாடல் நடந்தது. தங்கப்பாண்டி கோபமாகக் கேட்டார். “அப்படியா... அந்தத் தார்க்குச்சி சொன்னாள்...?”

“வரவர நான் சொல்றத நீங்க நம்பமாட்டேங்கறீங்க? ஒங்களுக்கு இப்போ சரஸ்வதிதான் அழகாத் தெரியும். ஒங்க ‘ஒய்ப்’ ஒரு தடவ இங்க வந்து என்னைத் திட்டிட்டுப் போனாள். இப்போ சரஸ்வதிய வீட்டுக்குள்ள கூப்பிடுறாள். ஒங்க புத்தி தெரியாம... உம்... என்னைத் திட்டுன பாவம் அவள சும்மா விடுமா?”