கேள்வித் தீ127
டெபுடி குதித்தார்: “இதெல்லாம் இர்ரெஸ்பான்ஸிபில், அட்டி ரூட், எஸ்.எஸ்.எல்.சி. படிச்சிட்டு, ரெண்டு வருஷம் டிரெயினிங் வேற அழுதுருக்கீங்க. இதுகூடத் தெரியல. ஹெச். எம்! இனிமேல் இவங்கள கணக்குப் பாடத்த எடுக்கச் சொல்லாதீங்க. மதிய உணவுத் திட்டத்தையும் வேற பொறுப்பான ஆசிரியர்கிட்ட கொடுங்க. அண்டர்ஸ்டாண்ட்?”
“அண்டாஸ்டாண்ட் ஸார்” என்றார் ஹெச்.எம்.
சரஸ்வதிக்கு ஒன்றுமே ஓடவில்லை. “சாப்பாடே போடவில்லை... எப்போதுமே போடவில்லை” என்று சொன்னால், ‘அப்படின்னா எப்படி பொய்க் கணக்கு எழுதலாம்?... எழுதமாட்டேன்னு சொல்ல வேண்டியது தானேன்னு’ அவர் திருப்பிக் கேட்கலாம்... கடைசியில் தங்கப்பாண்டியின் தப்புக்கு, ‘டெப்டி எனக்குத் தண்டனை கொடுத்திருக்கிறார்.’
டெப்டி–இன்ஸ்பெக்டர், ஏழாவது வகுப்பிற்குள் வந்தார். சண்முகம், தன் பிள்ளைகளுக்கு அன்று மகாத்மாகாந்தியைப் பற்றி ‘கதை’ சொல்வதாக வாக்களித்திருந்தான். நேற்று சுபாஷ் சந்திரபோஸ், பகத்சிங் ஆகியோரைப் பற்றிச் சொன்னான். காந்தி கதையைச் சொல்ல முடியாமல் செய்த டெப்டி–இன்ஸ்பெக்டரை, பிள்ளைகள் கோட்ஸேவாக நினைத்தார்கள்.
“த... நீங்கதான்... ஸெட் தயாரிக்காக டிரெயினிங் போனது?” என்று சண்முகத்தைக் கேட்டார் டெப்டி
“ஆமாம் ஸார்.”
“சரி, ஒரு கணக்குப் போட்டுக் காட்டுங்க.”
சண்முகம் பிள்ளைகளைப் பார்த்து ஆனந்தமாக ஆரம்பித்தான்: “ஒருவருக்கு, ஒரு நாளைக்கு நூறு கிராம் கோதுமை மாவுன்னா, இருநூறு பேருக்கு எவ்வளவு வரும்?”