உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதிய திரிபுரங்கள்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

142சு. சமுத்திரம்

சாவகாசமாக பேப்பரைத் தேடியபோது, “அதோ பேப்பர் இருக்கது தெரியல எருமமாடு. ஒன்னைப்போய் தையல் வாத்தியனாய் போட்டேன் பாரு. சீக்கிரமா ரெடி பண்ணு” என்றார். அவன் ‘ரெடி’ செய்ததும் “கதவ மூடிட்டு வெளிலயே நில்லு, எவனையும் உள்ளேவிடாதே” என்றார். ‘பல தையல்களை’ ஏற்பாடு செய்யும் அந்த ஆசிரியன், ஒன்றும் புரியாமல் கதவை மூடினான்.

கூரைக் கட்டிடத்தில் இருந்த ஆசிரியர்களும், காரைக் கட்டிட ஆசிரியர்களும், சண்முகத்தை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம், அவன் நடந்ததை விளக்கினான்.

சீனிவாசன், “இவனை விடப்படாதுடா. சண்டாளப் பய! காலா காலத்துல சம்பளத்த தராததுனால் என் மகளை அனுப்ப முடியாமப் போய் கடைசில, அவளைக் கட்டுன ‘காவாலிப்’பயல் ‘இனிமேல் ஒப்பன் வீட்லயே இருந்துக்க. ஒருவேளை ஊர்ல, வேற இன்ட்ரஸ்ட் ஏதாவது இருக்கு’முன்னு பொடி வச்சி எழுதியிருக்கான். என் மகள் நல்லாச் சாப்பிட்டு நாலு நாளு ஆவுது. இந்தப் பயல பொடிப்பொடியாய் ஆக்காமல் விடப்படாது” என்றார். சரஸ்வதி, சண்முகத்தை பயத்தோடும், பரிதாபத்தோடும் பார்த்தாள். என்ன நடக்குமோ... ஏது நடக்குமோ...

திடீரென்று ஆறாவது வகுப்பில் சரஸ்வதி அழும் சத்தங் கேட்டது. பிள்ளைகளின் கூச்சலையும் மீறி அவள் கூப்பாடு போட்டாள்.

“அய்யோ, நேத்துதான் எங்கப்பாவை ‘இவ்வளவு நாளும் மரம் வெட்டுனது போதும், இனிமேல் நான் சம்பளம் வாங்குறத நினைக்காமல் வேலைக்குப் போனீங்கன்னா, நான் வேலைக்குப் போகமாட்டே’ன்னு சொன்னேன். சொன்னபடியே ஆயிட்டுதே... ஆயிட்டுதே...”