நடராஜன் சட்டைநாத பிள்ளையை நாடிச் சென்றான்.
"மாப்பிள்ளை வாருங்கோ." சட்டைநாத பிள்ளை நடராஜனை எப்பொழுதும் இப்படித்தான் கூப்பிடுவார்; அதுவும் தனியாக இருக்கும் பொழுது.
"அந்தப் புஸ்தகம் வேண்டுமே; நாளாகிவிட்டது."
"அதைத்தான் சொல்ல வந்தேன். புஸ்தகத்தை இங்குதான் வைத்திருந்தேன். காணவில்லை. பயப்படாதே; விலையைக் கொடுத்துவிடுவோம். சவுந்திரம் பயல் திருடி இருப்பானோ என்று சந்தேகம்" என்று சொல்லிக் கொண்டே உள்ளே சென்றார்.
நடராஜன் திடுக்கிட்டுவிட்டான். இப்படியும் அப்படியும் உலவிக் கொண்டிருக்கும்பொழுது அந்தப் புஸ்தகம் கண்ணில் பட்டது. ஆச்சரியம், திகில், கோபம்.
"இந்தாருங்கள் 20 ரூபாய் இருக்கிறது. கேட்ட விலையைக் கொடுத்து விடுங்கள்" என்று சிரித்துக் கொண்டே நீட்டினார்.
"புஸ்தகம் அதோ இருக்கிறதே?"
சட்டைநாத பிள்ளை திடுக்கிட்டார்.
பிறகு சமாளித்துக் கொண்டு, "என்ன மாப்பிள்ளை! அந்தப் புஸ்தகம் கிடைக்காதது. விலையைக் கொடுத்துவிடுங்கள். நான் எழுதும் புஸ்தகம் அவ்வளவு முக்கியம். அது இல்லாவிட்டால் நடக்காது உங்களுக்குத் தெரியாததா?"
"அது திருட்டுத்தனம். என்னால் முடியாது."
"நான் புஸ்தகத்தைக் கொடுக்க முடியாது. உம்மால் இயன்றதைப் பாரும்."
"என்ன இது அதிகப்பிரசங்கித்தனமாக இருக்கிறது! புஸ்தகத்தைக் கொடுமென்றால்..."
"அதைக் கொடுக்க முடியாது... இதோ ரூபா இருக்கிறது. எடுத்துக்கொண்டு போம். நான் அண்ணாச்சியிடம் பேசிக்கொள்ளுகிறேன்."
"அண்ணாச்சியாவது, ஆட்டுக்குட்டியாவது? புஸ்தகத்தைக் கொடும் என்றால்..."
வார்த்தை அதிகப்பட்டது. ஏகவசனமாக மாறியது.
"அப்பா அதைத்தான் கொடுத்துவிடுங்களேன்" என்றது, தழுதழுத்த குரல் கதவு இடையிலிருந்து.
கண்கள் மாத்திரம் நடராஜன் மனதில் பதிகிறது. தங்கம்தான்! என்ன தங்கம்! மனதிற்குள், "இவனுக்கா இந்தப் பெண்" என்ற நினைப்பு.
"போ கழுதை உள்ளே. உன்னை யார் கூப்பிட்டது? நியாயம் சொல்ல வந்தாயாக்கும்! போ நாயே!"
புதுமைப்பித்தன் கதைகள்
147