உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பருவங்களைக் கடந்து, தமக்குத்தாமே சொந்தமாக வைத்துக் கொண்ட மோட்டார் என்ஜினீயர் என்ற பட்டத்துடன் 'ஒர்க் ஷாப்' என்ற பெயருடைய ஒரு கொல்லப் பட்டடையை ஸ்தாபித்தார்.

இந்தப் பத்து வருஷங்களில் பத்தரைக் கையில் பிடிக்க முடியாது. கையில் பணம் ஓட்டமிருந்தால் யாரும் அப்படித்தான். ஏறாத தாசி வீடு இல்லை; உடலில் வாங்காத வியாதி இல்லை.

இந்தக் காலத்தில்தான் பையன் கெட்டுப் போய்விடுவான் என்று எண்ணி அவருடைய உறவினர்கள் கல்யாணமும் செய்து வைத்தார்கள். அந்த அம்மாணி மூன்று வருஷத்தில் இரண்டு பெண் குழந்தைகளைப் பத்தருக்கு ஒரு பொறுப்பாக வைத்துவிட்டுக் காலமானாள்.

உறவினர்கள், ராமசாமிப் பத்தரின் குடும்ப வாழ்க்கையில் கவலைப்பட ஆரம்பிக்கு முன்னமே 'ஒர்க் ஷாப்' அவர்கள் தடுத்து விடலாம் என நம்பியிருந்த அந்த நிலைமைக்கு வந்துவிட்டது. எங்கே பார்த்தாலும் கடன். வேலைக்காரர் தொல்லை. வேலையும் அவர் குறித்த நேரத்தில் முடித்துக் கொடுக்க முடியாததனால் மற்ற கம்பெனிகளைத் தேடிவிட்டன.

இந்த மாதிரி நிலைமை விரைவில் நீங்கிவிடும் என்ற நம்பிக்கையிலேயே ஒரு பத்து வருஷம் கழிந்தது.

மனிதன் ஒரு நிலைமை வரையில்தான் பொறுத்துக் கொண்டு இருக்க முடியும். தலைக்கு மேல் வெள்ளம் சென்றால்?

ஒரு சுப தினத்தில் 'ஒர்க் ஷாப்' கதவடைக்கப்பட்டது. அடைத்ததனால் அவருடயை நிலைமை மேலோங்கி விடவில்லை. 'செட்டி இருந்தும் கெடுத்தான், இறந்தும் கெடுத்தான்' என்ற கதைதான்.

கொஞ்சநாள், தம் வயசு வந்த பெண்களின் கதியை நோக்கிக் கண்ணீர் விட்டுக்கொண்டு, ஊரைச்சுற்றி வந்தார். கடன் தொல்லை, பெண்களின் பொறுப்பு, எல்லாம் சேர்ந்து அவரை நாற்பது வயசிலேயே ஊக்கங்குன்றிய கிழவனாக்கிவிட்டன. உடல் வன்மையாவது இருக்கிறதா? பழைய சல்லாப காலங்களில் சேகரித்த 'முதல்' வீணாகப் போகவில்லை. மருந்து என்ற சிறிய தடையுத்தரவிற்குப் பயந்து இத்தனை நாட்கள் பதுங்கியிருந்த வியாதிகள் மீண்டும் உறவாட ஆரம்பித்தன.

'இண்டோ -யூரோப்பியன் மோட்டார் மெக்கானிகல் ஒர்க்ஸ்' முதலாளியான ராமானுஜலு நாயுடு அவருக்கு ஒரு பிட்டர் வேலை கொடுத்தபொழுது, 'அன்ன தாதா' என்று அவரை மனமாரப் புகழாமல் இருக்க முடியுமா? நீரும் நானும் இந்த மாதிரி இரண்டு பெண் குழந்தைகளை வைத்துக் கொண்டு அதன் பொறுப்பை ஏற்றுக்கொண்டு வேலையில்லாமல் திண்டாடியிருந்தால் அம்மாதிரித்தான் புகழ்வோம்.

150

தியாகமூர்த்தி