உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/603

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

"என்னவே அதட்டுரே?" என்று பதில் அதட்டு கொடுத்தார் குருக்களையா.

"ஏனா நான் தான் புது போஸ்ட் மாஸ்டர்; உம்மை செக் பண்ண வந்தேன். உம்மமீது 'பிளாக் மார்க்' போட்டு வேலையை விட்டு நீக்க ஏற்பாடு செய்கிறேன்; கடுதாசி படிக்கிற வழக்கமா?" என்றார் புதியவர்.

"எனக்குக் குத்தம் என்று படல்லே; இதுவரை... புகார்..."

"பரம ஏகான்மவாதமோ... பகிர் நோக்கு இல்லையாக்கும்" என்று குத்தலாகக் கேட்டார் புதியவர்.

"நான் அப்பவே இந்த ஏகான்ம மாயாவாதம் வேண்டாம் என்று சொன்னேனே கேட்டீரா; இனிமேலாவது..." என்று தலையில் அடித்துக் கொண்டார் குருக்களையா.

உலகநாத பிள்ளை பகிர் முகமற்று பேச்சற்று நிர்விகற்ப சமாதியில் ஒடுங்கினார். அந்த மௌனத்திலும் தம் நடத்தை குற்றம் என்று படவில்லை அவருக்கு.

"என்ன பிள்ளைவாள்! அந்தப் பய காலண்டர் அனுப்பலியே" என்று கேட்டுக்கொண்டே வேலாயுதத் தேவர் உள்ளே நுழைந்தார்.

எல்லோரும் மௌனம் சாதிப்பது கண்டு "என்ன விசேஷம்" என்றார்.

"இவகதான் புதுசா தாலுகாவுக்கு வந்த போஸ்ட் மாஸ்டராம்! உலகநாத பிள்ளை வேலையெ போக்கிடுவோம் என்று உருக்குதாவ" என்று ஏளனம் செய்தார் குருக்களையா.

"இவுகளா? சதி. இந்த ஊரு எல்லையெத் தாண்டி கால் வச்சாத்தானே அய்யாவுக்கு வேலை போகும். இங்கே வேலாயுதத் தேவன் கொடியல்ல பறக்குது" என்று துண்டை உதறிப் போட்டுக்கொண்டு மீசையில் கைவைத்தார் வேலாயுதத் தேவர்.

"ஊர் எல்லை தாண்டினாத்தான் என் அதிகாரம்; நான் போணும்னு அவசியம் இல்லெ; என் பொணம் போனாலும் போதும்" என்றார் புதியவர்.

"மயானத்துக்குக் கால் மொளச்சு நடந்துபோன காலத்தில் பாத்துக்குவம். இப்ப பேசாமே சோலிய பாத்துக்கிட்டுபோம்!" என்றார் தேவர்.

"சதி, சதி விடுங்க. குருக்களையாவாலே இவ்வளவும். எவனையா வேலெமெனக்கட்டு வேறொருத்தன் கடுதாசியைப் படிப்பான்" என்றார் சுப்பையர்.

நவசக்தி ஆண்டு மலர், டிசம்பர் 1944 - ஜனவரி 45

602

நிர்விகற்ப சமாதி