"பொய் சொல்லாதே. மடிலே கனமிருந்தா, வழியிலே பயம்" என்று சிரித்தான் அந்த அந்நியன்.
"ஒம்ம கிட்ட உண்மையெச் சொன்னா என்ன? என் மகளுக்குக் கலியாணம். நான் போயித்தான் நாலு வேலே பாக்கணும். ஒரு சோடு இரவல் பாம்படம் வாங்கிக்கிட்டுப் போறேன். ஏதோ பகட்டா செய்தாத்தானே நாலு பேரு மதிப்பான்!" என்றாள் கிழவி.
"பாம்படமாவதிருக்கே!" என்று கேட்டுவிட்டு அவளைக் கூர்ந்து நோக்கினான். பிறகு, "எத்தினி மக்கள் உனக்கு? மகள் என்ன மூத்ததா?" என்று கேட்டான். அவன் கண்களும் மனமும் கிழவியைத் துருவிக் கொண்டிருந்தன.
"எல்லாம் ஒத்தைக்கொன்னுதான்!"
"சரி"
பிறகு இருவரும் பேசாமல் நடந்தனர். அந்த மறவன் கிழவியை நோக்குவதும், பிறகு குனிந்து யோசிப்பதுமாக நடந்தான்.
சற்று நேரத்தில் கிழவி, "அதோ கோயில் தெரியுது. நான் இனிமே போயிக்கிடுவேன்" என்றாள்.
"ஏ ஆச்சி! நில்லு, ஒரு சமுசாரம். நீ ஏழெதானெ? இன்னா, இதெ வச்சுக்க! முதல் பேரனுக்கு ஏன் பேரிடு!"
"நீங்க மகராசரா இருக்கணும். என்ன பேரு இட?" என்று சொல்லிக்கொண்டே, தனது எதிர்பாராத அதிர்ஷ்டத்தில் மதிமயங்கிக் கையை நீட்டினாள்.
"சங்குத் தேவரின்னு!"
கையில் வாங்கிய பணப்பை பொத்தென்று விழுந்தது. "வேண்டாம், வேண்டாம்! என்னெ விட்டிருங்க, நான் ஓடிப் போரேன்!" என்று பதறினாள்.
"இல்லெ ஆச்சி, எடுத்துக்கோ! ஒன்னெ கண்ணாணை ஒண்ணுஞ் செய்யலே!" என்று கையில் கொடுத்து அனுப்பினான். கிழவியும் திரும்பிப் பார்த்தபடியே இருட்டில் மறைந்தாள்.
சங்குத் தேவன் அங்கிருந்த கல்லில் சற்று உட்கார்ந்தான். குழம்பிய மூளை சரியானது போல் தெரிந்தது. "ஆமாம், கிழவி திடுக்கிட்டுப் போயிட்டா. ஒண்ணா ரெண்டா, நூறு! இதுவும் ஒரு வேடிக்கெதான்! சங்குத் தேவனெக் கெழவி..." என்று முனகிக் கொண்டே எழுந்து ஓர் ஒற்றையடிப் பாதையில் நடந்தான்.
காந்தி, 25.4.1934
புதுமைப்பித்தன் கதைகள்
65