உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள் (முழுவதும்).pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருக்குறள் செய்த திருக்கூத்து

துப்பறியும் இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர் வித்தல் ராவ் என்றால் சாதாரண மக்களுக்குத் தெரியாமலிருக்கலாம்; அது ஒரு குற்றமல்ல - இரகசியப் போலீஸ் அல்லவா. ஆனால் போலீஸ் இலாகாவில் அவரது பிரக்யாதி தெரியாதிருப்பவன் உத்தியோகத்திலிருப்பதை விட பலசரக்குக்கடை வைக்கலாம். துப்பறியும் தொழிலில் அவர் யாருடைய சிஷ்யர் என்று நீங்கள் அறிந்திருந்தால் இவ்வளவு தூரம் நாம் எடுத்து எழுத வேண்டாம். மேல்நாட்டு ஷெர்லாக் ஹோம்ஸும் தென்னாட்டு பிரக்யாதிபெற்ற துப்பறியும் கோவிந்தனும் அவரது ஹ்ருதய கமலத்தில் தனித்தொகுதி பெற்று இருந்தனர். ஸ்ரீலஸ்ரீ திகம்பர சுவாமியார் அவர்களே துப்பறியும் தொழில் பஞ்சாட்சரத்தை அவர் காதில் உபதேசித்து அருளியது. இவ்வாறு மேல்நாடும் கீழ்நாடும் சம்மேளித்துப் பரிணமித்த இரகசியப் போலீஸ் வீரர் வித்தல் ராவின் திறமையைப் பற்றி இன்னும் சந்தேகிப்பவர்களை சுயமரியாதைக்கார நாஸ்திகர் என்று தள்ளிவிடலாம்.

நமது வித்தல் ராவிற்கு மாறுவேடத்தில் அபார நம்பிக்கை. அதிலும் தன்னுடைய திறமைக்கு எந்தத் தென்னிந்திய நாடகமேடை சார்லி சாப்பிளினும் போட்டி போட முடியாது என்பது இரண்டாவது நம்பிக்கை. சாதாரணமாக தாலுகா ஆபீஸ் குமாஸ்தா அல்லது எலிமெண்டரி பாடசாலை உபாத்தியாயர் மாதிரிதான் காட்சியளிப்பார். சிற்சில முக்கிய சமயங்களில்,மேல்நாட்டு உடைகளையணிந்து ஒரு ஜாவா சுருட்டு சகிதமாகப் புறப்பட்டுவிட்டால், அவரை வித்தல் ராவ் என்று நிரூபிப்பிபவர்களுக்கு என்ன வெகுமதி வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம். சிவபிரான் சிற்சில சமயங்களில் அர்த்தநாரீஸ்வரராகத் திகழ்வதும் உண்டு. கிப்ளிங் கவிதைக்கு விதிவிலக்காக, நமது வித்தல் ராவ், கீழ்-மேல் நாடுகளின் நடையுடை பாவனைகள் இரண்டும் கலந்து பரிணமித்த ஒட்டு மாங்கனியாகத் தனித்தமிழ் சிவத்தை முறியடிப்பதும் உண்டு.

சூரியன் அஸ்தமிக்காத பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் நெருக்கடியான காலம். இரகசியப் போலீஸ் இன்ஸ்பெக்டர், தம்மை ஒரு

புதுமைப்பித்தன் கதைகள்

69