குடிப் பெருமை
சோழன் நலங்கிள்ளி பெரிய போர் வீரன். சோழ நாட்டின் ஒரு பகுதியை அவன் ஆண்டு வந்தான். அவனுடைய தம்பி மாவளத்தான்;நல்ல சால்புணர்ச்சி மிகுந்தவன்;புலவர்களிடத்தில் பேரன்பு பூண்டவன். வீரமும் ஈகையும் அவன் குலத்துக்கே சொந்தமாக இருக்கும்போது அவனிடமும் இருந்தன என்று சொல்லவேண்டுமா, என்ன?
தாமப்பல் கண்ணனார் என்ற புலவர் மாவளத்தானுடைய நட்புக்குப் பாத்திரமானவர்;அந்தணர். தமிழ் இன்பத்தைத் தேக்கும் உள்ளத்தையும் தமிழ்ச் செய்யுட்கள் பாயும் மடையாகிய செஞ் செவிகளையும் உடைய மாவளத்தானுக்கு அவரைக் கண்டாலே மகிழ்ச்சி பொங்கும்;அவர் வார்த்தையைக் கேட்டாலோ உள்ளம் பூரிக்கும்;அதுவும் தமிழ்க் கவிதையை அவர் சொல்ல ஆரம்பித்தால் அவன் தன்னையே மறந்துவிடுவான்.
இந்த மாதிரி, செந்தமிழ் நுகர்ச்சியிலே இருவரும் சேர்ந்து மகிழ்வதோடு நில்லாமல், வேறொரு வகையிலும் அவர்கள் இருவரும் சேர்ந்து மகிழ்வதுண்டு. இருவரும் சதுரங்கம் விளையாடுவதிலே வல்லவர்கள். இளவரசனும் புலவரும் சதுரங்க விளையாட்டிலே ஈடுபட்டுவிட்டால் சில சமயங்களில் பகல் போனதும் தெரியாது; இரவு போனதும் தெரியாது; அப்படி விளையாடுவார்கள். புலமை விளையாட்டிலும் வட்டு