குடிப் பெருமை
53
உதிர்ந்து போயின. அவனிடமிருந்து எதிர்த் தாக்கு ஒன்றும் வரவில்லை.
இப்போது புலவர் சினம் ஆறியது. சற்று நிதானித்தார். தாம் கூறிய வார்த்தைகளை அவரே நினைத்துப் பார்த்தார். அத்தகைய நல்லிசைச் சான்றோருடைய வாயிலிருந்து வரக்கூடிய வார்த்தைகள் அல்ல அவை. அது மட்டுமா? சதுரங்க விளையாட்டானாலும் அதற்கு என்று ஒரு முறை, ஒரு தர்மம் இல்லையா? விளையாட்டுத் தர்மத்தையே கடைப்பிடிக்கத் தெரியாத அவர் உலகில் மற்ற எந்தத் தர்மத்தைக் கடைபிடிக்கப் போகிறார்! அவன் காயை எறிந்ததிலே என்ன பிழை? அவன் செய்தது சரிதான். குற்றம் தம்மேல் இருக்க இதை உணராமல் அவனைப் பின்னும் கொடிய மொழிகளால் புண்படுத்தலாமா? அந்த வார்த்தைகளை நினைத்தாலே நெஞ்சு நடுங்குமே! அவன் எறிந்த காயம் நாளைக்கு ஆறிவிடும். அவர் எறிந்தாரே அந்த வார்த்தைகளால் உண்டான புண் இந்தப் பிறவியில் ஆறுமா? 'இப்படி நம்மையே மறந்து கொட்டிவிட்டோமே' என்ற வருத்தந்தான் அவருக்கு மாறுமா? அவன் அரசன்; அவன் உணர்ச்சி செய்கையால் வெளியாகும்; மனம் மகிழ்ந்தால் கை உதவும்; அகம் சினந்தால் கை எறியும். இதை அவன் இன்று காட்டினான். புலவரோ தம் மன உணர்ச்சியை நாவால் வெளியிடுவார். அவர் மனம் மகிழ்ந்தால் வாய் பாடும். இன்று சினஞ் சிறந்த உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி சொல்லத் தகாத வார்த்தைகளை நாவால் வாரி இறைத்தது. அவனோ தன் கோபத்தைச் செயலில் காட்டாமல் அடங்கினான். இவரோ அடங்காமல் வசைமாரி பொழிந்தார். மாரி என்று சொல்லும்படி நெடு நேரம் வைய-