88
புது மெருகு
விட்டது. கம்பருக்கு இப்போது மலைப்பு வந்துவிட்டது. சோர்ந்துபோய்க் கீழே உட்கார்ந்தார்.
★★★
சக்கரவர்த்தி திருமுன்னர்ப் புலவர் கூட்டத்திடையே கம்பர் அமர்ந்திருக்கிறார். சோழ மன்னன் புன்னகை பூத்தபடி சிங்காதனத்தில் வீற்றிருக்கிறான். அருகில் இள நங்கையர் கவரி வீசுகின்றனர். கம்பர் மேனியில் கவரிக் காற்று மெல்லெனத் தவழ்கிறது. முதல் நாள் பாடிய ஒரு பாட்டின் சுவையைப்பற்றி அரசன் வியந்துகொண் டிருக்கிறான். கம்பருக்கு உண்டான பெருமிதம் கட்டுக்கு அடங்கவில்லை. "கம்பர் இந்த நாட்டுக்கு விளக்கு; நம் அவைக்களத்திற்கு நடு நாயக மணி; தமிழ் உலகத்திற்கே தனிப்பெரும் புலவர்" என்று மன்னன் வாயாரப் பாராட்டுகிறான். அங்குள்ள புலவர்களெல்லாம் உவகைக் குறிப்போடு தலையை அசைக்கின்றனர்.
★★★
காட்சி மறைந்தது. படை பதைக்கும் வெயில்; எதிரே சுவர் அவரைப் பார்த்துப் பரிகசித்துக்கொண்டு நிற்கிறது. இங்கே கவரி இல்லை, காற்று இல்லை. வெயில், வேர்வை, சோர்வு எல்லாம் இருந்தன. அவரைக் கவிஞரென்று தெரிந்துகொண்டவர் யாரும் இல்லை.
இரண்டையும் ஒப்பிட்டு நோக்கின கம்பர் உள்ளம் உணர்ச்சி வசமாயிற்று. சாதாரண மனிதனாக இருந்தால் அந்த உணர்ச்சி அழுகையாக வெளிவந்திருக்கும். அவரோ கவிஞர். அவர் உணர்ச்சி ஒரு கவிதையாக வெளியாயிற்று. உட்கார்ந்தபடியே அவர்