பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 / புத்தரின் வரலாறு

உடனே அமைச்சர்கள் அவரிடம் விடைபெற்றுக்கொண்டு ஆளாரகாலாமர் ஆசிரமத்துக்கு வந்தார்கள். வந்து போதிசத்துவரைக் கண்டார்கள். போதிசத்துவராகிய கௌதம முனிவர், அவர்களை அன்புடன் வரவேற்று, வந்த சேதியைக் கேட்டார். அவர்கள், சுத்தோதன அரசர் அடைந்துள்ள துயரத்தைக் கூறி திரும்பி வரும்படி அழைத்தார்கள். "அரசர் உம்மை உயிர்போல நேசிக்கிறார் என்பது உமக்குத் தெரியும். குமாரன் துறவு பூண்டு வெளிப்பட்டதைக் கேட்டது முதல் தீராத் துயரமடைந்து குற்றுயிராகக் கிடக்கிறார். குமாரனுக்குப் பட்டாபிஷேகம் செய்துவைக்க அவர் அவ கொண்டிருக்கிறார். குமாரன் இச்சிறுவயதில் துறவு கொள்ள வேண்டியதில்லை; பட்டாபிஷேகம் செய்துகொண்டு சிலகாலம் செங்கோல் செலுத்தி மக்களுக்கு நன்மை செய்தபிறகு துறவு கொள்ளலாம்.

"இதற்கு முன்பும் சில அரசர்கள் துறவுபூண்டு, பிறகு திரும்பிவந்து அரசாண்டிருக்கிறார்கள். முற்காலத்திலே அம்பரிஷ மகாராசன் அரசாட்சியை வெறுத்துக்காட்டுக்குச் சென்றார். பிறகு, அவருடைய அமைச்சர் நாட்டு மக்கள் முதலியோரின் வேண்டுகோளுக்கு இணங்கி திரும்பிச் சென்று அரசாட்சியை நடத்தினார். மனிதரின் கொடுஞ்செயல்களை வெறுத்த ராமராசன் என்னும் அரசர்காட்டுக்குச் சென்று வாழ்ந்திருந்தார். பிறகு திரும்பிவந்து அரசாட்சியை நடாத்தினார். வைசாலி தாட்டுத் துரூமராசனும் துறவு பூண்டு பிறகு திரும்பிவந்து அரசாட்சியை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு நன்மை செய்தார். துறவுபூண்டு காட்டுக்குச் சென்ற ரிஷி ராச சக்கரவரத்தி என்பவரும், இருக்குதேவராசரும், தர்மாசய ராசனும் திரும்பி வந்து சிம்மாசனத்தில் அமர்ந்து செங்கோல் செலுத்தி அரசாண்டார்கள்.

"குமாரனாகிய தாங்கள் இச்சிறு வயதில் துறவு கொள்வது தகாது. அருள்கூர்ந்து திரும்பிவந்து ஆரசாட்சியை ஏற்றுக்கொண்டு செங்கோல் நடத்திச் சில காலஞ் சென்ற பிறகு துறவு கொள்ளுங்கள்" என்று அமைச்சர்கள் கூறி வேண்டினார்கள்.

இவர்கள் கூறியதைக் கேட்ட போதிசத்துவர் இவ்வாறு கூறினார்: "அறிவுசான்ற அமைச்சர்களே! நீங்கள் கூறியது உண்மையே. எனது தந்தை என்னை எவ்வாறு நேசிக்கிறார் என்பதும் என் பிரிவு அவருக்கு எவ்வளவு துன்பத்தைத் தரும் என்பதும் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், நான் துறவு பூண்டது நானும் மற்றவர்களும் சாந்தி நிலையையடையும் வழியைக் கண்டுபிடித்தற்கேயாகும். அந்த வழியைக் கண்டறியாமல் நான் திரும்பி வரமாட்டேன். எனக்கு அரச பதவி வேண்டியதில்லை.