பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 45

அஞ்சாமல் இருப்பதற்குப் பழகிக்கொண்டார். இந்தக் காரணங்களை அறியாமல் மற்றவர் யாரேனும் அச்சங்கொண்டால் அவர்களுக்கு இக் காரணங்களை யறிவித்து அவர்களுடைய அச்சத்தை நீக்கினார்.

கௌதம முனிவர் தூரத்திலுள்ள கிராமத்திற் சென்று உணவைப் பிச்சை ஏற்று உண்பது வழக்கம். சில காலம் சென்ற பின்னர் இவ்வாறு உணவு கொள்வதை நிறுத்திக் காட்டில் சென்று அங்குள்ள பழங்களைப் பறித்து உண்ணப் பழகினர். இவ்வாறு சில காலஞ்சென்றது. பிறகு மரத்திலிருந்து கனிகளைப் பறிப்பதை நிறுத்தித் தாமாகவே மரத்திலிருந்து பழுத்து உதிர்ந்து விழுகிற பழங்களை மட்டும் எடுத்துச் சாப்பிட்டு வந்தார். சில காலஞ்சென்ற பின்னர், உதிர்ந்த பழங்களைக் காட்டிலே சென்று எடுப்பதையும் நிறுத்தித் தாம் இருக்கும் இடத்திலே மரங்களிலிருந்து விழும் பழங்களை மட்டும் சாப்பிட்டுவந்தார்.

கிலேசங்களை வெல்லுதல்

இவ்வாறு உணவைக் குறைத்துக்கொண்ட கௌதம முனிவர். தமது மனத்தில் உள்ள கிலேசங்களை (குற்றங்களை) வெல்வதற்காக. அக்காலத்துத் துறவிகள் செய்துவந்த வழக்கப்படி கடின தபசுகளைச் செய்யத் தொடங்கினார். பற்களை இறுகக் கடித்துக்கொண்டு வாயை மூடிக்கொண்டு வாயின் அண்ணத்திலே நாவை நிறுத்தித் தீய எண்ணங்களை அகற்றி நல்ல எண்ணங்களை மனத்தில் நிறுத்திக் கடுமையான தபசு செய்தார். அப்போது அவருடைய உடம்பில் வலி ஏற்பட்டது. பலமுள்ள ஒரு ஆள் பலமில்லாத ஒருவனைப் பிடித்துக் குலுக்கி, ஆட்டுவதுபோல இவருடைய உடம்பில் வலி உண்டாயிற்று. அக்குளில் (கைக்குழிகளில்) வியர்வை ஒழுகிற்று. ஆனாலும் கௌதம முனிவர் தமது முயற்சியை விடவில்லை.

அப்பிரணத் தியானம்

பின்னர் அப்பிரணத்தியானம் செய்யத் தொடங்கினார். அதாவது மூச்சையடக்கும் பயிற்சி செய்யத் தொடங்கினார். மூக்கையும் வாயையும் இறுக மூடிக்கொண்டு மூச்சை அடைத்து இந்தத் தியானத்தைச் செய்தார். அப்போது, துருத்தியிலிருந்து காற்று புஸ்ஸென்ற ஒலியுடன் வெளிப்படுவதுபோன்று, இவருடைய காதுகளின் வழியாக மூச்சு வெளிவந்தது. தலையின் உச்சியில், தச்சன் துரப்பணத்தால் (துளைப்பாணத்தால்) துளைப்பதுபோன்று, பெரிய வலி ஏற்பட்டது.இவ்விதம் வலி ஏற்பட்டபோதும் இவர் விடாமல்