பக்கம்:புத்தரின் வரலாறு 2011.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மயிலை சீனி. வேங்கடசாமி / 71

குருவைத் தேடல்

அஜபால மரத்தின் அடியில் எழுந்தருளியிருந்த பகவன் புத்தருக்கு ஒரு குரு வேண்டும் என்னும் எண்ணம் உண்டாயிற்று. யாரும் ஒருவரைக் குருவாகக் கொண்டு அவரை வணங்கி வழிபடுவது நல்லது. குருவைப் பெறாதவர் நன்மை பெறுவதில்லை. ஆகையினாலே நாமும் ஒரு குருவை நாடிக்கொள்ள வேண்டும். அவருக்குத் தாம் மாணவனாக இருந்து அவரை வழிபட வேண்டும். அப்படிப்பட்ட ஒருவரைத் தேடிக்கொள்ள வேண்டும் என்னும் எண்ணம் தோன்றியது. ஆகவே அவர் யாரைக் குருவாக கொள்ளலாம் என்று தமக்குள் சிந்தித்தார். இவ்வாறு சிந்தித்துத் தேடிப் பார்த்தபோது தமக்கு மேலானவர் ஒருவரும் மூவுலகத்திலும் இல்லாததையறிந்து, "பிறர் உதவி இல்லாமல் என்னாலேயே மிக நன்றாக அறிந்துகொள்ளப்பட்ட அறத்தையே நான் குருவாக ஏற்றுக் கொள்கிறேன். அறத்தையே வழிபாட்டு வணங்கிப் போற்றுகிறேன்" என்று தமக்குள் கூறிக்கொண்டார்.

அப்போது சஹம்பதி மகாபிரமன் அவர் முன்தோன்றி வணக்கம் செய்து, "ஆமாம் புத்தரே! ஆமாம் சுகதரே! சென்ற காலங்களில் புத்தஞானம் பதவி பெற்ற புத்தர்கள் எல்லோரும் சத்தர்மதத்தையே குருவாகக் கொண்டு வணங்கி வழிபட்டார்கள். வரும் காலத்திலும் புத்தஞான பதவியையடையப்போகிற புத்தர்களும் சத்தர்மமாகிய அறத்தையே குருவாகக் கொண்டு வணங்கி வழிபடுவார்கள். ஆகையால், உத்தமரே! இந்தக் காலத்திலே புத்தஞானப் பதவியைப் பெற்ற தாங்களும் சத்தர்ம அறத்தினையே குருவாகக்கொண்டு போற்றி வழிபடுவது நல்லது" என்று கூறி வணங்கினார்.

நாகராசன் வணங்கியது

ஐந்தாவது வாரத்தை அஜபால மரத்தண்டைக் கழித்த பகவன் புத்தர், ஆறாவது வாரத்தில் அம்மரத்தை விட்டு அகன்றுபோய் முசலிந்த மரத்தண்டை சென்றார். அங்கு அந்த வாரம் முழுவதும் சமாபத்தி தியானத்தில் அமர்ந்திருந்தார். அப்போது மழைகால மில்லாமலிருந்தும்பெரிய மேகங்கள் சூழ்ந்து மிகவும் இருண்டு ஏழுநாளும் மழை பெய்தது. குளிரும் அதிகமாயிருந்தது. அப்போது நாகலோகத்திலிருந்து நாகராசன் வந்து, குளிரும் மழையும், எறும்பும் கொசுவும் பகவரை அணுகக்கூடாது என்று கருதி, தனது உடம்பினால் பகவன் புத்தரை ஏழு சுற்று சுற்றிக்கொண்டு தன் தலையைப் படமெடுத்துப் பகவன் புத்தர் தலைக்குமேல் குடை போலத்