பக்கம்:பொன் விலங்கு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

196 பொன் விலங்கு

விழிகளைக் காணும் போதெல்லாம் 'ஒரு தூரத்து நண்பருக்கு என்ற தலைப்பில் தொகுக்கப் பெற்றிருக்கும் கவி பைரனின் ஆங்கிலக் கவிதை ஒன்றை நினைவு கூர்ந்தான் அவன்.

'நாம் இருவரும் சந்தித்துப் பிரிந்தபோது கண்ணிரும் அமைதியுமே இருந்தன என்று ஆரம்பமாகிற அந்தப் பாடல் 'கண்ணிராலும் அமைதியாலுமின்றி இதை நான் எப்படி வரவேற்க முடியும்?' என்ற கேள்வியோடு முடியும். வென் வி டு பார்ட்டெட்இன் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ் என்ற ஆரம்ப வரிகளும் ஹெள ஷல்ட் ஐ கிரீட் - த்தீ வித் சைலன்ஸ் அண்ட் டியர்ஸ் என்ற இறுதி வரிகளும் அதே கவி வடிவத்தோடு அவன் இதயத்தில் மீண்டும் மீண்டும் பதிந்து உறைகிற ஞாபகமாகச் சுழன்றன. பொன்னுக்கும் பொருளுக்கும் கடன்படுவதைவிடத் தூய்மையான அன்புக்கு அதிகமாகக் கடன்பட வேண்டியதன் அவசியம் இப்போது அவனுக்குப் புரிந்தது. ஊருக்குப் போவதைப்பற்றி இரண்டு வார்த்தை சொல்லிக்கொண்டு போகலாம் என்று வந்த இடத்தில் அன்புக்குக் கட்டுப்பட்டு அதிக நேரம் உட்கார்ந்துவிட்டதை உணர்ந்தான் அவன். எந்த இடத்தில் பிறரை வெற்றி கொள்ள முடிந்த தூய்மையான அன்பு பிறந்து பொலிந்து நிற்கிறதோ அந்த இடத்தில் மனிதனுடைய பிடிவாதம் தோற்றுப் போய்விடுகிறது என்பது உண்மைதான். மோகினியின் அன்பு சங்கீத விநாயகர் கோவில் தெருவிலிருந்த அந்தச் சிறிய வீட்டில் பிடிவாதமாக அவனைப் பிடித்து உட்காரவைத்து விட்டது. முதலில் அந்தத் தெருவிற்குள் நுழைவதற்கே அவன் கால்கள் கூசின. அப்புறம் அந்த வீட்டிற்குள் நுழைவதற்கு அவன் கால்கள் தயங்கின. இறுதியில் அத்தனை தயக்கத்தையும் அவள் வென்றாள்.

இருள் தூங்கும் கூந்தல் அவிழ்ந்து பெருக - அப்படிப் பெருகும் எல்லையிலாப் பேரழகுக்கு ஒரு தடையிட்டுக் கட்டினாற்போல் பட்டு ரிப்பனால் கட்டி, அந்தக் கருமை வெள்ளத்தின் அலைகளுக்குள்ளிருந்து தானே பூத்துச் சரிந்தது போன்ற ஒரு கொத்துப் பூவோடும் புன்னகை பூத்த முகத்தோடும் அவள் வந்து நின்றபோது அவனும் தன்னை மறந்து நின்று விட்டான். மோகினி என்று அவளுக்கு இசைவாகப் பெயர் வைத்தவர்களை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பொன்_விலங்கு.pdf/198&oldid=595207" இலிருந்து மீள்விக்கப்பட்டது