பக்கம்:மகாத்மா காந்தி, அண்ணாதுரை.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10


நாட்டை மீட்க ஒரு ரணகளச் சூரரையும், நல்லாட்சி அமைக்கப் பல கலைவாணரையும், மக்களை நல்வழிப்படுத்த அறநெறி கூறுவோரையும் நாடியாக வேண்டும். எந்த நாட்டுக்கும் அனைவரும் ஏக காலத்தில் கிடைக்கமாட்டார்கள். ஒரு தலை முறையிலே வீரன் தோன்றி விடுதலை தருவான். மற்றோர் தலை முறையிலே நிபுணர் தோன்றி நல்லாட்சி அமைப்பார். பிறிதோர் சமயம் பேரறிஞர் தோன்றி மக்களுக்கு நல்வழி காட்டுவார்.

உத்தமர் காந்தியாரின் உள்ளம். இந்த மூன்றுபண்புகளையும் ஏக காலத்தில் ஒன்றுக் கொன்று குறையாத அளவில் கொண்டு இருந்தது. மூன்று தலைமுறைகள், மூன்று தனித்தனித் தலைவர்கள் கொள்ள வேண்டிய குணத்தை, அவர் ஒருவர் கொண்டிருந்தார். உலக வரலாற்றிலே இதற்கு வேறு ஈடு கிடையாது.

விடுதலை வாங்கித்தந்தவர்கள் உண்டு - போர்த் திறனால்!
நல்லாட்சி நிறுவீயர்கள் உண்டு அறிவின் மேம்பாட்டினால்:
மக்களை நல்லவர்களாக்கினவர்கள் உண்டு - தூய்மையினால்.

மூன்று அரும்பணிகளையும் ஒரு சேரச் செய்த ஒப்பற்ற சிறப்பு, உத்தமர் காந்தியார் ஒருவருக்கேதான் உண்டு.

நாடு விடுதலை பெற, அன்னியருடன் போராட வேண்டி இருந்தது - செய்தார். வெற்றிபெற்றுநாட்டுக்குச் சிறப்பை வாங்கித் தந்தார்.

நல்லாட்சி நிறுவுவதற்காகத் திட்டங்களை நிபுணர்களைக்கொண்டு தீட்ட வேண்டும்.- அந்தக் காரியத்தை நடத்த, அகிலம் அறிந்த பண்டித நேரு இருக்கிறார் என்ற களிப்பும் நம்பிக்கையும் கொண்டார்.